அன்பை யாசகமாகக் கேட்காதீர்கள்; கொடுங்கள்!
நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். எனக்குத் திருமணமாகி 20 வருடங்கள் (arranged marriage) ஆகின்றன. ஆனால் திருமண வாழ்க்கை முழுவதும் சொல்லிக் கொள்ளும்படி சந்தோஷமாக இருந்ததில்லை. எல்லா மனைவிக்கும் கிடைக்கும் அன்னியோன்யம் எனக்குக் கிடைத்ததில்லை. நிறையப் பிரச்சனைகள், மனக்கசப்புகளைக் கடந்து வந்துள்ளேன். குழந்தைக்காகவும் என் எதிர்காலத்தை முன்னிட்டும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். கடந்த மூன்று வருடங்களாகச் சிறிது சிறிதாக உருவான பிரச்சனை மிகவும் மனப்பாதிப்பை உண்டாக்கும் வகையில் உள்ளது. என் கணவர் எந்த வார்த்தையைச் சொன்னால் நான் காயப்படுவேன் என்று தெரிந்து வைத்துக்கொண்டு என்னை வெறுப்பேற்றும் வகையில் அவராகவே வலிய வந்து தினமும் அந்த வார்த்தையையே உபயோகப்படுத்துகிறார்.

நான் அவரிடம் பேச்சு வார்த்தை அதிகம் வைத்துக் கொள்வதில்லை. மற்றவர்களிடம் சகஜமாகப் பேசிப் பழகும் அவர் என்னிடம் மட்டும் இயல்பாகப் பேச முயற்சிப்பதில்லை. மாலை நேரம் ஆனாலே ஆஃபீசில் இருந்து வந்து என்ன சொல்லிக் காயப்படுத்துவாரோ என்ற மன உளைச்சலுடன் காலத்தை தினமும் ஓட்டுகின்றேன். Migraine, anxiety மற்றும் இன்ன பிற உடல் மன உபாதைகளால் அவதிப்படுகிறேன். மனதில் நிம்மதி இல்லாததால் உடல்நல பாதிப்பு அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று பலமுறை சொன்னாலும் கேட்பதாகத் தெரியவில்லை பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துவைக்க எனக்குப் பெரியவர்கள் உறவினர்கள் என்று யாரும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இந்த வயதிற்கு மேல் தனியாகப் போய் வாழ மனதிலோ உடலிலோ துணிச்சல் இல்லை. ஆனால் இதிலிருந்து எப்படி மீள்வது என்றும் தெரியவில்லை.

I understand that every human being is imperfect. Even I have flaws, but I have tried to mature over the years. I don't go out of the way to hurt someone. I feel the reason for my problems is there is no love and mostly hatred. Please give me a solution.

இப்படிக்கு
.......

அன்புள்ள சிநேகிதியே,

உங்கள் கடிதம் - எனக்கும் வலிக்கிறது. இதுபோன்ற குடும்ப வாழ்க்கைதான் நிறையப் பேருக்கு வாய்த்திருக்கிறது என்பது போல, அடிக்கடித் தீர்வு கேட்டு வருவது இதுபோன்ற பிரச்சனைகள்தான். நீங்கள் உங்கள் நிலைமையை விவரங்கள் அதிகம் இல்லாமல், பொதுவாகத்தான் கோடிட்டு இருக்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்று என் கருத்துக்களைத் தெரிவிக்க வாய்ப்பு இல்லை. பொதுவாக எழுதுகிறேன்.

20 வருடத் திருமண வாழ்க்கையில் ஒரு பந்தம் ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் மனம் வெறுமையில் தவிக்கும் போது, மொத்த வாழ்க்கையுமே பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்ற பரிதவிப்பு மிகவும் வேதனையைக் கொடுக்கிறது. இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். யார் தவறு செய்கிறோம், எங்கே தவறு செய்கிறோம், நாம் தவறு செய்வது நமக்குப் புரிபடுகிறதா, புரிந்தால் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்றெல்லாம் தவிக்கிறோம். "Make it or break it" என்று எளிதாகச் சொல்லிவிட முடிகிறது. ஆனால், எந்த அளவுக்கு அதைச் செயல்முறையில் கொண்டு வருவது என்பதற்கு வழி தெரியாமல் இருதலைக் கொள்ளிகளாக இருக்கிறோம். யார் முதலில் விட்டுக்கொடுத்து, ஈகோவைக் குறைத்துக் கொண்டு, குழந்தைகளுக்காக, குடும்ப நன்மைக்காக, இல்லற மகிழ்ச்சிக்காக மற்றவரைப் புரிந்து கொள்வது? இந்த முயற்சியே மிகவும் சவாலாக இருக்கிறது.

மற்ற உறவுகளை விட தாம்பத்திய உறவில்தான் சிக்கல் அதிகம். மற்ற உறவுகள் அனைவற்றிலும் (நட்புத் தவிர) ஒன்று ஏறும்; ஒன்று இறங்கும். இது என் அப்பா, நான் மதிக்கிறேன்; இது என் மேலதிகாரி; நான் தாழ்ந்து போகவேண்டும்; இது என் தம்பி, வயதில் சின்னவன்; நான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது போல. ஒரு கணவனும், மனைவியும் சமூகத்தின் பார்வையில் ஒரே தட்டில்தான் வைக்கப்படுகிறார்கள். பொறுப்புக்கள் தான் வித்தியாசப்படும். அந்தக் காலத்தில் இருந்த, ஆண் என்றால் ஆதிக்கம்; பெண் என்றால் அடக்கம் என்ற 'Role stereotype'கள் தொலைந்து போய்விட்டன. இப்போது உறுப்புகளும், உருவ அமைப்புகளும் மட்டுமே ஆணையும், பெண்ணையும் அடையாளம் காட்ட, பொறுப்புகள் சமமாகப் போன நிலையிலும் ஆணுக்கு அடக்கும் ஆசை விடவில்லை. குறை சொல்ல முடியாது. "அம்மா ஒரு பேங்க் ஆஃபீசர். அப்பாவின் கோபத்துக்கு ஈடு கொடுத்து, பாட்டிக்குச் சேவை செய்து, 3 குழந்தைகளை வளர்த்து, படிக்க வைத்து எல்லாம்தானே இவளைப்போலச் செய்திருக்கிறாள். இவள்மட்டும் நான் வீட்டு வேலை செய்யாவிட்டால் குத்திக் குதறி எடுக்கிறாள்" என்று ஒரு கணவர் தன் மனைவியைப் பற்றிப் புலம்பித் தீர்த்து விட்டார். காலங் காலமாக மனைவியின் சேவையை எதிர்பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் கொஞ்சம், கொஞ்சமாகத்தான் மாற முடியும். அலையாய் ஆர்ப்பரித்து, அழகாய் தன் திறமைகளை வெளிக்கொணர முடியாமல், தன் தாய் அடிமை வாழ்வு வாழ்ந்திருக்கிறாளே என்று ஒரு பெண் எண்ணும் போது, அவள் சம உரிமைப் போராட்டத்தைத் துவக்கி விடுகிறாள்.

அதுதான் விவாகரத்துக்கு விதையாக மாறுகிறது. என்னுடைய கருத்தில், யார் வலி அதிகம் என்று உணர்ந்து வழி தேடுகிறார்களோ அவர்கள் பிரச்சனை ஆரம்பிக்கும் இடங்களைக் கண்டுபிடித்து, அங்கெல்லாம் ஓட்டைகளை அடைத்துக் கொண்டே வர வேண்டும். உதாரணம்: உங்களைக் காயப்படுத்த வேண்டும் என்று நினைத்து உங்கள் கணவர் உதிர்க்கும் சொல். அது என்ன, ஏன் என்ற விவரம் எனக்குத் தெரியாது. ஆனால், You can desensitize assosiation with that word. அதை உங்களால் கண்டிப்பாகச் செய்ய முடியும். அதனால் காயத்தின் பாதிப்பைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் அன்னியோன்யம் வளருமா என்று தெரியவில்லை. இந்த 20 வருடங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்த சம்பவங்கள் உள்ளனவா? உங்களுக்கென்று ஆசையாக ஏதாவது செய்திருக்கிறாரா? அப்படியென்றால், உங்கள் உறவு பலம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

அவர் என்ன செய்தால் சந்தோஷப்படுவார் என்று ஒரு செக் லிஸ்ட் போட்டுக்கொண்டு, செய்து பார்க்கலாம். நீங்கள் அன்பை எதிர்பார்க்கிறீர்கள். அன்பு என்பது பொருள் வகையைச் சேர்ந்தது அல்ல. நாம் கஷ்டப்பட்டாலும் கிடைக்காமல் போவதற்கு. அன்பு, மரியாதை, இரக்கம் நம் எல்லோரிடமும் கொட்டிக் கிடக்கிறது. நாம் அதை வெளியில் கொண்டுவருவதில்லை. அதன்மேல் சுயபச்சாதாபம், வெறுப்பு, கசப்பு என்ற உணர்ச்சிகளைப் போட்டு மூடிவிட்டு அவஸ்தைப்படுகிறோம். ஒருமுறை, ஒரே முறை முயற்சி செய்து பாருங்கள். முடியாது என்பதே இல்லை. அன்பை யாசகமாகக் கேட்காதீர்கள். நீங்கள் கொடுத்து விடுங்கள். Be a giver, be a giver. அந்த அன்பு உங்கள் மனதை நிரப்ப, நிரப்ப உங்களுக்கே உங்கள் மேல் மரியாதையும், நம்பிக்கையும் பெருகும். அப்போது உங்கள் கணவரின் எந்தச் செயலும் உங்களைப் பாதிக்காது. அதற்குப் பதிலாக அவருக்குப் பிடித்தவற்றை நீங்கள் செய்ய ஆரம்பிப்பீர்கள். எங்கே பிரச்சனை ஓட்டைகள் தெரிகிறதோ அதை மூடி விடுவீர்கள். அப்போது அவர் உங்கள் அன்புக்கு ஏங்கத் தொடங்குவார். You will be a new you. நாம் சந்திக்கும் கோணத்தை மாற்றிக் கொண்டாலே பாதி பிரச்சனைகள் விலகி விடும்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com