ஆகஸ்டு 2012: வாசகர் கடிதம்
நான் தென்றல் ஜூலை இதழை வாசித்தேன். அதில் வந்துள்ள கதை, கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்தன. ஹூஸ்டன் சந்திரமௌலி எழுதிய 'சில மாற்றங்கள்' குறுந்தொடரைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். கதை மிகச் சிறப்பு. "என் மனசு முழுக்க பழிவாங்கணும்கிற வெறி கரும்புகை மாதிரி மண்டிக்கிடந்தது. இவ்வளவு வருஷம் நீ உன் பாவத்தை நினைச்சு வேதனைப்பட்டு, தினமும் மனசுக்குள்ள மன்னிப்பு கேட்டே உன் மனசை சுத்தமாக்கிட்டிருந்த" என்று ஸ்ரீ, ரங்கராஜிடம் சொல்வது என் நெஞ்சைத் தொட்டது. பாராட்டுக்கள்!

ஸ்ரீதரன்,
கலிஃபோர்னியா

*****


ஜூலை 2012 தென்றல் இதழில் 'கடல் தாண்டிய உறவுகள்' அருமை. 'நீதான் காரணம்' மனசைத் தொட்டது. 'பொருத்தம்' நல்ல சிரிப்புக் கதை.

டாக்டர். சுப்ரியா சாந்திலால்,
ப்ளெசண்டன், கலிஃபோர்னியா

*****


தென்றல் இதழில் வெளியான 'கடல் தாண்டிய உறவுகள்' சிறுகதை அருமையிலும் அருமை. தமிழகத்தில் வாழும் பலரது மனோநிலையை அந்தக் கதை படம் பிடித்துக் காட்டியிருந்தது. தாய், தந்தையைப் பேணிக்காப்பதும், இறைவனை வணங்குவதும் சமமாகும். மனித உறவுகள் நலிந்து போய் முதியோர் இல்லங்கள் பெருகி வரும் இக்காலத்தில் உறவுமுறை மிக மிக அவசியம். அதை இக்கதை வலியுறுத்துகிறது. பேரா. ஸ்ரீனிவாச வரதன் பேட்டி அனைவரும் படித்துப் பயனுற வேண்டிய ஒன்று.

வி.கே.துரைசுவாமி,
சன்னிவேல், கலிஃபோனியா

*****


'தென்றல்' ஜூலை 2012 இதழ் பார்த்தேன். ர.சு.நல்லபெருமாள் பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. அவர் எழுதிய 'கடல் தாண்டிய உறவுகள்' சிறுகதை அருமை. குழந்தைகளை படிப்பிற்காகவும், பதவிக்காகவும் வெளிநாட்டிற்கு அனுப்பும் பெற்றோர்களின் அவல நிலையை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது அக்கதை. எல்லே சுவாமிநாதன் எழுதிய 'பொருத்தம்', செல்வன் எழுதிய 'துணிவே துணை' போன்றவை சுவையாக இருந்தன. சீதா துரைராஜ் எழுதிய அழகர் கோயில் கட்டுரை அருமை. பேரா. ஸ்ரீநிவாச வரதன் நேர்காணல் சிறப்பாக இருந்தது. அவர் வாங்கிய பட்டங்களும், பரிசுகளும் பிரமிப்பைத் தந்தன. மருத்துவர் வரலட்சுமி நிரஞ்சனின் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

பி.பி. சுந்தரேசன்,
ஸ்டோன்ஹம், மசாசூசெட்ஸ்

© TamilOnline.com