அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: 5வது ஆண்டு நாள்
மே 12, 2012 அன்று, சிகாகோ மாநகரத்தை அடுத்துள்ள தமிழ்ப் பள்ளிகளின் ஐந்தாவது ஆண்டு நாள் வில்லா பார்க்கிலிலுள்ள புனித அலெக்சான்டர் பள்ளி உள்ளரங்கில் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாக திருக்குறள், ஆத்திசூடி, தமிழ்த்தாய் வாழ்த்துக்களைப் பள்ளி மாணாக்கர்கள் பாடினர். மே 17, 2009 முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த 40000 மேற்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட அமைதிக்குப் பின்னர் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் பாபு வரவேற்புரை ஆற்றினார்.

சிகாகோ மாநகரத்தைச் சுற்றி செயல்படும் 6 பள்ளிகளோடு, மன்ஸ்டர் (இந்தியானா), மில்வாக்கி (விஸ்கான்சின்) சேர்ந்து மொத்தம் 8 பள்ளிகள் விழாவில் பங்கு பெற்றன. ஷாம்பர்க், நேப்பர்வில் பள்ளி மாணவ, மாணவியர் 'தமிழா! தமிழா விழித்திடு!', 'தமிழ்ப்புலவர் பெருமக்கள் அன்றிலிருந்து இன்றுவரை', 'தமிழ்மறை திருக்குறளுக்கு புத்தம் புதிய பொருளுரை' என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை வழங்கினர். கெர்ணி பள்ளி மழலையர் வழங்கிய 'உயிர் எழுத்து அறிமுகம்', 'நல்லதொரு உடல்காக்கும் உணவு' நிகழ்வுகள் மகிழ்ச்சியில் ஆழ்த்தின. வில்லுப்பாட்டில் தெனாலிராமனையும், திருடனையும் காணவைத்தது கண்கொள்ளாக்காட்சி. 'அப்பாஜியும், கிருஷ்ண தேவராயரும்' என்ற நடனம் சேர்ந்த காட்சி அருமை.

இப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி காணிக்கைகள் அளிக்கப்பட்டன. திருக்குறள் கூறுதல், சொல் கண்டுபிடித்து எழுதுதல், எழுத்தைச் சொல், சொற்றொடர் எனவாக்குதல், சொல் தொடரும் திறன், குறளைச் சிறுகதையென வடித்தல், பழமொழி காணுதல் ஆகியவற்றில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 461 குறள்களைப் பிழையின்றிக் கூறி, குறள் ஒன்றிற்கு ஒரு டாலர் எனப் பரிசுத்தொகை பெற்ற செல்வன். நித்தின் சுப்பிரமணியைக் குழுமியிருந்தோர் வியந்து பாராட்டினர். ஷாம்பர்க் பள்ளி ஒருங்கிணைப்பாளர் முரளி நன்றி கூறினார்.

வ.ச. பாபு,
வில்லா பார்க், இல்லினாய்

© TamilOnline.com