இந்தியர்களுக்கு எடிசன் விருது
அமெரிக்க விஞ்ஞான மாமேதை தாமஸ் ஆல்வா எடிசன் விருது 'ரூரல் ஷோர்ஸ்' (Rural Shores) எனப்படும் இந்திய நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தைத் தொடங்கிய, சென்னையைச் சேர்ந்த சுஜாதா ராஜு மற்றும் குழுவினர் எடிசன் விருதில் 'வாழ்முறை மற்றும் சமூகத் தாக்கம்' (Lifestyle and Social Impact) என்ற பிரிவின்கீழ் வெண்கலப் பதக்கத்தை நியூ யார்க்கில் நடந்த விழாவில் ஏப்ரல் 26, 2012 அன்று பெற்றுக்கொண்டனர். கிராமத்திலிருந்து நகரங்களை நோக்கித் திறன் வெளியேறுவதால் (brain drain due to urban migration) ஏற்படும் விளைவை அகற்ற ரூரல் ஷோர்ஸ் (www.ruralshores.com) மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சுஜாதாவும் நண்பர்களும் என்னதான் செய்தனர்? தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் பெரிய நகரங்களிலேயே நடத்தப்படுகின்றன. அதன் காரணமாக கிராமத்து இளைஞர்கள் நகரத்துக்கு நகர்வதைக் குறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தனர். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் "கிராம சேவையே ராம சேவை" என்று கூறியிருப்பதை நினைவில் கொண்ட சுஜாதா 'SAI SEVA" (Serve And Inspire Sustained Employment for Village Advancement) என்கிற, முழுதும் கிராமத்திலேயே இருந்துகொண்டு, பெரிய நிறுவனங்களுக்குப் பின்னணி வேலை செய்கிற 'BPO' அமைப்பைப் புட்டபர்த்தியில் தொடங்கினார். அங்கே இருந்த இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்துச் செயல்பட்ட இதன் வெற்றி மூத்த நிர்வாகிகளான முரளி வல்லகண்ட்டி, C.N. ராம், V.V. ரங்கநாதன், சுதாகர் ராம், G. ஸ்ரீனிவாசன் ஆகியோரின் கவனத்தைக் கவரவே, இவர்கள் சேர்ந்து ரூரல் ஷோர்ஸைக் கர்நாடக மாநிலத்தின் பாகேபள்ளி என்ற கிராமத்தில் தொடங்கினர். இன்றைக்கு இதன் கிளைகள் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பஞ்சாப் என்று நாடெங்கிலும் பரந்து விரிந்துள்ளது!

25 ஆண்டுகளாக தரப்பட்டு வரும் எடிசன் விருதுகளை வழங்க USA Today, Discovery Channel, Nielsen ஆகிய பிரபல அமெரிக்க நிறுவனங்கள் ஒத்துழைக்கின்றன. இந்தப் பரிசுகள் விஞ்ஞானம்/மருத்துவம், உபயோகத் தொழில்நுட்பம், போக்குவரத்து, மின்னணுவியல் மற்றும் கணிப்பொறியியல், வாழ்முறை மற்றும் சமூகத் தாக்கம் போன்ற பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்ற நிலைகளில் வழங்கப்படுகின்றன.

"இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் இருக்கிறது" என்று கூறிய தேசப்பிதா மகாத்மா காந்தியின் சொற்களை மறவாமல் செயலாற்றி, அதை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துள்ள சுஜாதா ராஜு குழுவினருக்கு வாழ்த்துக்கள். இந்தச் சேவையைப் பற்றி அறியவும், ஆதரிக்கவும்: sujatha@saiseva.co.in

அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி,
பென்சில்வேனியா

© TamilOnline.com