நிருத்ய நிவேதன்: 'குரு வந்தனம்'
மார்ச் 17, 2012 அன்று 'நிருத்ய நிவேதன்' நாட்டியப் பள்ளியின் (www.nrithyanivedhan.com) இயக்குனர் புவனா வெங்கேடஷ் அவர்கள் மில்பிடாசில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில் 'குருவந்தனம்' என்ற நிகழ்ச்சியை வழங்கினார். தனது குரு சாஹித்ய சிரோமணி பிரபா நாகராஜன் அவர்களின் எழுபதாவது பிறந்த நாளை ஒட்டி இந்த நிகழ்ச்சியை அவர் வழங்கினார். தனது குருவின் கலைத்தொண்டு பற்றிய அறிமுகத்துடன் நிகழ்ச்சியைத் துவக்கினார். அவர் பரதக் கலையை விரும்பியதோடு0 அதையே வாழும் கலையாக போதித்து உள்ளார்.

முதலில் தலைமை மாணவி மற்றும் மகளான ஹர்ஷிதா வெங்கேடஷ் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். தொடர்ந்து ஜதீஸ்வரம் மற்றும் வர்ணம் ஆடினார். மகிஷாசுர மர்த்தினியின்மேல் அமைந்த வர்ணத்திற்கு அவர் பிடித்த அபிநயம் மிகவும் அருமை. தொடர்ந்து, கிருஷ்ணர்மீது அமைந்த காவடிச்சிந்து 'நின்றந்த மயில்' நடனத்தை புவனா வெங்கேடஷ் அற்புதமாக ஆடினார். பின்னர் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நடனம் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியின் உச்சமாக ஹர்ஷிதாவின் காளிங்க நர்த்தனம் அமைந்தது. இதில் புஜங்க கரணங்கைள அற்புதமாக ஆடினார். மங்களத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

கீதா கண்ணன்,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com