தெரியுமா?: சுரேஷ் பெற்ற பரிசு!
சுரேஷ், கேரளத்தின் எர்ணாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலுவாகடுநல்லூர் என்ற ஊரில் லாட்டரி டிக்கெட் விற்பவர். ஜனவரி மாதத்தில் ஒருநாள் ஐயப்பன் என்ற முதியவர் இவரிடம் லாட்டரிச் சீட்டு வாங்க வந்தார். அப்போது அவரிடம் பணம் இல்லாததால், பிறகு வந்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். ஐந்து டிக்கெட்களைத் தனியாக எடுத்து வைத்தார் சுரேஷ். மறுநாள் அந்தப் பெரியவர் வரவில்லை. ஆனால், அந்த முதியவருக்காக எடுத்து வைத்திருந்த ஐந்து லாட்டரி டிக்கெட்டுகளில் ஒன்றுக்கு ஒரு கோடியே நாற்பதாயிரம் ரூபாய் பரிசு விழுந்த விவரம் சுரேஷுக்குத் தெரிய வந்தது. சுரேஷ் உடனடியாக ஐந்து டிக்கெட்டுகளையும் எடுத்துக்கொண்டு ஐயப்பன் வீட்டுக்குச் சென்றார். முதியவரிடம் விவரத்தைச் சொல்லி, டிக்கெட்டுக்கான 250 ரூபாய் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு லாட்டரிச் சீட்டுகளை அவரிடமே கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

சுரேஷ் "நான் டிக்கெட்டை ஐயப்பன்கிட்ட கொடுக்கப் போயி விவரம் சொன்னேன். ஆனா அவர், நான்தான் பணம் தரலையே. டிக்கெட்டை எடுத்துக்கிட்டு பரிசையும் நீங்களே வாங்கிக்குங்கன்னு சொன்னார். அது என் மனசுக்கு சரியாப் படலை. அதனால 250 ரூபாய் பணத்தை வாங்கிட்டு டிக்கெட்டை அவர் கையில கொடுத்துட்டு வந்துட்டேன். 'கடவுள் நமக்கு இதைக் கொடுக்கலை. அதனால உரியவங்ககிட்ட இந்தப் பணம் போய்ச் சேர்றதுதான் நியாயம்'னு என் மனைவியும் சொன்னாங்க. என்னய்யா பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கியேன்னு அக்கம்பக்கத்துல கிண்டல் பண்ணினாங்க." ஐயப்பனுக்கு 30, 28 வயசுல ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. அவங்களை எப்படிக் கரை சேர்க்கறதுனு அவர் ரொம்ப திண்டாடிக்கிட்டு இருந்தார். அதனால அவங்களைக் கைதூக்கிவிடறதுக்காகக் கடவுள் அவருக்குத் தந்த பரிசுதான் இது. இதை நானே எடுத்துக்கிறது கடவுளை மட்டுமல்ல, என்னையும் ஏமாத்திக்கிற மாதிரிதான்'' என்கிறார். ஆனால் சுரேஷும் ஒன்றும் வசதியானவரல்ல என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. தினமும் பல கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து லாட்டரி விற்கும் அவருடைய அண்ணன் டீக்கடைவைத்து நடத்துகிறார். தம்பி செங்கல் அறுக்கும் பணியில் இருக்கிறார். அக்கா கூலி வேலை செய்கிறார்.

வலிய வந்த ஸ்ரீதேவியை வேண்டாம் என்று சொன்ன சுரேஷின் இந்த நேர்மைக்காக சுரேஷைக் கேரளாவே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதுபற்றிக் கேள்விப்பட்ட இயக்குநர், நடிகர் பார்த்திபனும் அவரைக் குடும்பத்தோடு சென்னைக்கு வரவழைத்து 'மனிதநேயன்' என்ற விருதை வழங்கிப் பாராட்டியிருக்கிறார்.

"ஒருவேளை அந்த ஒரு கோடி ரூபாயை நாங்களே வாங்கியிருந்தாக் கூட எங்களுக்கு இவ்வளவு பெருமை வந்திருக்காது. அவ்வளவு நல்லவங்களை இப்போ பார்க்கிறோம். இதுவரைக்கும் 61 மேடைகள்ள எங்களைப் பாராட்டியிருக்காங்க. வி.கே. லாண்ட் தீம் பார்க் உரிமையாளர், எங்க பசங்க படிப்புக்கு உதவி செய்றதா சொல்லியிருக்கார். எங்க மாநில முதல்வர் நேரில் அழைச்சு பெருமைப்படுத்தியிருக்கிறார். ஆயுசுக்கும் இது போதும் சார் எங்களுக்கு" என்கிறார் சுரேஷின் மனைவி தீபா நெகிழ்ச்சியுடன். சுரேஷ்-தீபா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். மகள் ஸ்ரீலட்சுமி எட்டாம் வகுப்பு படிக்கிறார். மகன் ஸ்ரீஹரி நான்காம் வகுப்பு.

© TamilOnline.com