ஆல்பரட்டா தமிழ்ப் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்
பிப்ரவரி 5, 2012 அன்று ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் பொங்கல் மற்றும் குடியரசு தினங்கள் கொண்டாடப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவைக் கவிதா அன்பரசன் தொகுத்து வழங்கினார். குழந்தைகளின் தமிழ் வகுப்பு சார்ந்த கலைக் கண்காட்சி நுழைவாயிலருகே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

மேனிலைப் பள்ளிக் குழந்தைகளின் பொங்கல் கலை நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கலில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, காணும் பொங்கல் ஆகிய நான்கு நாள் நிகழ்ச்சியை ஆடல் பாடல்களில் கண்முன்னே கொண்டுவந்தனர். துவக்க நிலை வகுப்புக் குழந்தைகள் குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில், பலதலைவர்கள் போல் வேடமிட்டு, வசனம் பேசி உள்ளத்தைக் கொள்ளை கொண்டனர்.

பள்ளி முதல்வர் சுந்தரி குமார் நன்றி தெரிவித்தார். பின்னர் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS) தலைவர் தங்கமணி பால்ச்சாமி வரவிருக்கும் GATS பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அழைத்தார். தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது.

ராஜி முத்து,
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி

© TamilOnline.com