வாஷிங்டன்: தியாகராஜ ஆராதனை
2012 ஜனவரி 14, 15 தேதிகளில் தை மாதம் கிருஷ்ண பகுள பஞ்சமியில் 29 வருடங்களாகத் தியாகராஜ ஆராதனை நடந்து வருகிறது. அமரர் ராஜி சௌந்தர்ராஜன் இதனை முதன்முதலாக வாஷிங்டன் சிவா-விஷ்ணு கோயிலில் தொடங்கி வைத்தார். இந்த வருட விழா உஞ்சவிருத்தியுடன் தொடங்கியது. பின்னர் வாஷிங்டன் வட்டார கர்நாடக இசைப் பாடகர் குழு பஞ்சரத்ன கீர்த்தனைகளை அரங்கேற்றியது. சுருதி ரமேஷ் (10) நிகழ்த்திய ஹரிகதா காலட்சேபம் அனைவரையும் நெகிழ வைத்தது. வயலின் வாசித்த விக்ரம் சிவகுமார் (12), மிருதங்கம் வாசித்த ராகவ் முரளீதரன் (15) இருவரும் பிரமாதம். தொடர்ந்து சிவகுமார் நிகழ்த்திய வினாடி-வினா தகவல் நிறைந்ததாக இருந்தது. மாலையில் சங்கீதா சுவாமிநாதனின் கச்சேரி. பக்க வாத்தியமாக பாவனி ஸ்ரீகாந்த் (வயலின்), விஜய் கணேஷ் (மிருதங்கம்). பாபநாசம் சிவனின் 'துணை புரிந்தருள்' என்ற வரமு ராகத்துப் பாடலை லாவகமாகக் கையாண்டு பாண்டித்தியத்தை வெளிப்படுத்தினார் சங்கீதா.

ஞாயிறன்று 11 வயதுச் சிறுவன் சாகேத பந்துலா நிகழ்த்திய சிறு கச்சேரியில் பைரவி ராக ஆலாபனையும் கீர்த்தனையும் ஆழமும் முதிர்ச்சியும் கொண்டதாக இருந்தது. பக்கவாத்தியமாக பள்ளி மாணவி ரஞ்சனி பார்த்தசாரதி (வயலின்), வேத ப்ரவீண் (மிருதங்கம்) வாசித்தனர். அதன் பிறகு வாஷிங்டன் வட்டார இசைப்பள்ளிகள் 'நாதோபாசனா' மூலம் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தின. மாலையில் MIT மாணவர் வருண் கணேசன், வாஷிங்டன் வட்டாரக் கலைஞர்களான கமலகிரண் (வயலின்), அஜய் ரவிச்சந்திரன் (மிருதங்கம்) ஆகியோருடன் உற்சாகமான கச்சேரி ஒன்றை வழங்கினார். தன்னார்வத் தொண்டர்களின் ஒத்துழைப்பில் விழா சிறப்பாக நடந்தேறியது.

பாலாஜி, சிவகுமார் ஜகதீசன்,
வாஷிங்டன் டி.சி.

© TamilOnline.com