விருதுச் செய்திகள்
பத்ம விருதுகள்
இந்திய அரசின் மிக உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ 77 பேருக்கும், பத்மபூஷண் 27 பேருக்கும், பத்மவிபூஷன் 5 பேருக்கும் வழங்கப்பட உள்ளன. இவர்களில் 19 பேர் பெண்கள். தமிழகத்தைச் சேர்ந்த வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன், தொழிலதிபர் சுப்பையா முருகப்பன் ஆகியோர் பத்மபூஷண் பெறுகின்றனர். கூத்துப்பட்டறை நிறுவனர், எழுத்தாளர், நடிகர் ந.முத்துசாமி, சமூக சேவகர் டாக்டர் பி.கே.கோபால், சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் வி.மோகன் மற்றும் முதியோர்நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆகியோர் பத்மஸ்ரீ பெறுகின்றனர்.

இவர்களுடன் கலை ஓவியத்துறையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கே.ஜி. சுப்ரமணியன், கோவாவைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் மறைந்த மரியோ டி.மிராண்டா, நடிகை ஷபானா ஆஸ்மி, சினிமா இயக்குனர் மீரா நாயர், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர் மறைந்த பூபேன் ஹசாரிகா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணர் காந்திலால் ஹஸ்திமால் சன்செட்டி, இதய சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி, டெல்லியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.ராஜேஷ்வர் ஆகியோரும் பத்மபூஷண் பெறுகின்றனர். நவீன விவசாயத்தில் சாதனை செய்த புதுவை வெங்கடபதி, பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஜூலன் கோஸ்வாமி, வில்வீரர் லிம்பா ராம் ஆகியோர் பத்மஸ்ரீ பெறுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். வரும் ஏப்ரல் மாதத்தில் இவர்களுக்கு டெல்லியில் குடியரசுத்தலைவர் திருமதி பிரதீபா பட்டீல் விருதுகளை வழங்க இருக்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது
கனடாவிலிருந்து இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருதுக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் 2011ம் ஆண்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், லண்டன் பத்மநாப ஐயர், ஜார்ஜ் எல். ஹார்ட், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொ. ஆகியோர் இதற்கு முன்னர் இவ்விருது பெற்றுள்ளனர். கடந்த 25 வருடங்களாக தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் சீரிய தொண்டாற்றி வரும் எஸ்.ரா.வின் பணியைப் பாராட்டி வழங்கப்படும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது, கேடயமும் 1500 கனடிய டாலர் தொகையும் கொண்டதாகும்.

தேவதச்சனுக்கு விளக்கு விருது
தமிழின் முக்கியமான முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான தேவதச்சனுக்கு 2010ம் ஆண்டுக்கான 'விளக்கு' விருது வழங்கப்படுகிறது. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான 'விளக்கு', புதுமைப்பித்தன் நினைவாக ஆண்டுதோறும் இவ்விருதை வழங்கி வருகிறது. இதுவரை சி.சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார் ஆகியோர் பெற்றுள்ளனர். நாற்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கியது இவ்விருது. "அத்துவான வேளை", "கடைசி டைனோசார்", "யாருமற்ற நிழல்", "ஹேம்ஸ் என்னும் காற்று", "இரண்டு சூரியன்" போன்றவை தேவதச்சனின் முக்கியமான கவிதைத் தொகுதிகளாகும்.

அரவிந்த்

© TamilOnline.com