சாண்டியேகோ தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா
2011 நவம்பர் 19 அன்று சாண்டியேகோ தமிழ்ச் சங்கம், கார்ல்ஸ்பேட் பள்ளியில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியது. குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட நிகழ்ச்சி ஆரம்பமானது. தலைவர் பன்னீர் செல்வம் வரவேற்று, செயல் உறுப்பினர்களை அறிமுகப் படுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சிகளை, கலைத் தொடர்பு செயல் உறுப்பினர் பீணா செந்தில்குமார் தொகுத்து வழங்க இனிய பாடல்களுடன் நிகழ்ச்சி களைகட்ட ஆரம்பித்தது. முதல் நிகழ்ச்சியாக, சிறு பெண் குழந்தைகளின் நாட்டியம், தோடகாஷ்டகம் பாடல் அரங்கேறியது. அதனைத் தொடர்ந்த வானவில் நடனம் மிகச் சிறப்பு.

முன்னதாக நடைபெற்ற கோலம் மற்றும் சமையல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் அரசிகளாக முடிசூட்டப் பெற்றனர். முத்தாய்ப்பாக மேஜிக் நிகழ்ச்சி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. வந்திருந்தவர்கள் அனைவரையும் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து ஸ்ரீனிவாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். முடிவில் செயலர் அரசு சஞ்சீவி நன்றி கூற விழா நிறைவு பெற்றது.

செய்திக் குறிப்பிலிருந்து
புகைப்படம்: ராம் சேஷன்

© TamilOnline.com