ராதிகா விஸ்வநாதன் நடன அரங்கேற்றம்
நவம்பர் 26, 2011 அன்று நியூ யார்க் நகரின் ஃப்ளஷிங் பகுதி மகா வல்லப கணபதி கோவில் கலைக்கூடத்தில் சிவஜோதி டான்ஸ் அகாடெமியின் மாணவி ராதிகா விஸ்வநாதனின் அரங்கேற்றம் நடைபெற்றது. குரு தேஜஸ்வினி ராஜின் சிறந்த பயிற்சியில் ராதிகா ஜதியும், லயமும் கூட்டி நிகழ்ச்சியைத் தொடங்கினார். மலயமாருத நாச்சியார் கவுத்துவத்தில் துவங்கி, அலரிப்பு, ஜதீஸ்வரம் (பூரி கல்யாணி), தஞ்சாவூர் நால்வரின் சப்தம் (மிச்ர சாபு தாளம்), பாபநாசம் சிவனின் 'சாமி நான் உன் அடிமை' என்ற நாட்டக்குறிஞ்சி வர்ணம் என்று விறுவிறுப்பாக ஆடியதைக் கண்டு அவையோர் பரவசமடைந்தனர். வர்ணத்தின் அடிகளுக்கு குரு தேஜஸ்வினி அமைத்திருந்த அபிநயங்கள் சிறப்பாக இருந்தன. பரமசிவனின் சிதம்பர நடனத்தைப் பலவித கோணங்களில் சித்தரித்தது 'சச்சித்தானந்தத்தின்' பெருமையை விளக்குவதாக அமைந்திருந்தது.

இரண்டாவது பகுதியில் காளிங்க நர்த்தனம், காவடிச் சிந்து, தேவி கிருதி, மலையாள பதம், லால்குடி ஜெயராமன் இயற்றிய ரேவதி ராகத் தில்லானா என்று அமர்க்களமாகச் சென்ற நிகழ்ச்சி மங்களத்துடன் நிறைவெய்தியது. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த 15 வயது ராதிகா, குருவின் கடினமான பயிற்சியை ஏற்றுக்கொண்டு ஒரு தேர்ந்த நடனமணி போல் ஆடிச் சிறப்பித்தாள். குரு தேஜஸ்வினி கலாக்ஷேத்ரா காட்டுமன்னார் கோயில் முத்துகுமரன் பிள்ளை பாணியைக் கலப்படமில்லாமல் கற்பித்து நம் பாரம்பரியத்தைக் காக்கும் குருவாகத் திகழ்கிறார்.

சாவித்திரி ராமானந்த் (வாய்பாட்டு), அருண் ராமமூர்த்தி (வயலின்), பாலஸ்கந்தன் (மிருதங்கம்), கல்யாணராமன் (புல்லாங்குழல்), பாலகணேசன் (மோர்சிங்) ஆகியோர் சிறப்பாகப் பக்கவாத்தியம் இசைத்தனர். குரு தேஜஸ்வினி கம்பீரமாக நட்டுவாங்கம் செய்தார். ராதா வரதாச்சாரி செவ்வனே நிகழ்ச்சிக்கு விளக்கவுரை வழங்கினர்.

நிர்மலா ராமசுப்ரமணியன்,
நியூ யார்க்

© TamilOnline.com