பார்கவி கணேஷ் அரங்கேற்றம்
செப்டம்பர் 10, 2011 அன்று, நியூ ஜெர்ஸி ரட்கர்ஸ் நிகோலஸ் மியூசிக் சென்டரில் பார்கவி கணேஷின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடைபெற்றது. பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் பார்கவி, கடந்த பத்து வருடங்களாக நியூ ஜெர்ஸியில் உள்ள வீணா வாணி பள்ளியில் குரு கல்யாணி ரமணி, பேராசிரியர் சுப்புலட்சுமி ஆகியோரிடம் இசை பயின்று வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சங்கீதா சூடாமணி லால்குடி விஜயலட்சுமியிடமும் இசை கற்று வருகிறார். நிகழ்ச்சி வீணா வாணி பள்ளி மாணவன் சுஷாந்த் ரமேஷின் இறை வணக்கத்துடன் துவங்கியது.

கல்யாணி ராக அட தாள வர்ணத்தில் கச்சேரி களை கட்டியது. பார்கவியின் உழைப்பும், குருநாதர்களின் வழிகாட்டுதலும் தெளிவாக வெளிப்பட்டன. தொடர்ந்து நாட்டை ராகத்தில் அமைந்த அம்பி தீட்சிதரின் வரசித்தி விநாயகம் பாடலை விறுவிறுப்பான கல்பனா ஸ்வரங்களுடன் பாடினார். தொடர்ந்து தியாகராஜரின் அபூர்வமான சசிவதனாம் கீர்த்தனையை சிறப்பாகப் பாடி மகிழ்வித்தார். ஸஹானாவில் அமைந்த தியாகராஜரின் ஈபசுதாவை மிக நேர்த்தியாகப் பாடினார். பாபநாசம் சிவனின் கனடா ராக 'சரவண பவ குகனே', தோடியில் 'நின்னே நம்மினானு' என்ற ஸ்யாமா சாஸ்திரிகள் கிருதி ஆகியவை நல்ல பாடாந்தரத்தை வெளிப்படுத்தின. காமாட்சி கஞ்ச தளாயதாக்ஷி வரியை நிரவல், ஸ்வரம் பாட எடுத்துக் கொண்டு, அநாயாசமாகச் செய்து முடித்தார். பின்னர் பூச்சி சீனிவாச ஐயங்காரின் நீகேலனாவை தேவ மனோஹரியில் சிறப்பாகப் பாடினார்.

கச்சேரிக்குச் சிகரமாக ராகம், தானம், பல்லவி அமைந்தது. ரஞ்சனி ராகத்தில் அமைந்த, 'ரஞ்சனி, நிரஞ்சனி, பங்கஜ லோசனி, மஞ்சு பாஷிணி..' என்ற கண்ட ஜாதி திருபுடை தாள பல்லவியை கண்ட நடையில் லாவகமாகப் பாடி முடித்தார். பல்லவியின் இறுதியில் ரீதிகௌளை, நாசிகா பூஷணி, தேஷ் ராகங்களில் ஸ்வரங்களைப் பாடினார். பார்கவியின் கச்சேரிக்காகவே குரு லால்குடி விஜயலட்சுமி இந்தப் பல்லவியை இயற்றியிருந்தார். தொடர்ந்து ஜகதோதாரணா, ஜயஜயதேவி, முருகனின் மறுபெயர் என துக்கடாக்களைப் பாடினார். சாவேரியிலும், பெஹாகிலும் அவர் பாடிய விருத்தங்கள் மிக உருக்கம். இறுதியாக லால்குடி ஜெயராமனின் சிந்துபைரவி தில்லானாவைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

விட்டல் ராமமூர்த்தி (வயலின்), வித்வான் மேலக் காவேரி பாலாஜி (மிருதங்கம்), வித்வான் கணேஷ் குமார் (கஞ்சிரா), அதிதி ரமேஷ் (தம்புரா) ஆகியோரின் பக்கவாத்தியம் நிகழ்ச்சிக்கு மெருகூட்டின. குமாரி தீபா செல்லப்பா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பார்கவி கணேஷ் வயலினில் கர்நாடக இசையும், மேற்கத்திய இசையும் வாசிப்பதில் தேர்ந்தவர். சிறப்பு விருந்தினராக வந்திருந்த டாக்டர் சுவாமிநாதன் பார்கவி கணேஷைப் பாராட்டிப் பேசினார்.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com