ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து ம.தி.மு.க விலகல்!
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த ம.தி.மு.க. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவை விலக்கிக் கொண்டது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

புதுச்சேரியை சேர்த்து மொத்தம் உள்ள 40 இடங்களையும் கைப்பற்றிய இக்கூட்டணி மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்குத் தங்கள் ஆதரவை அளித்து வந்தது. தி.மு.க.வும், பா.ம.க.வும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றன. ஆனால் ம.தி.மு.க வெளியிலிருந்து மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது கடைசி நிமிடத்தில் தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. விலகி அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து கொண்டது.

ஆனாலும் மைய அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி அன்று கோவையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் பேசிய வைகோ குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. விலகிக் கொள்வதாக அறிவித்தார். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் 17 முக்கிய கோரிக்கைளை ம.தி.மு.க முன் வைத்தது. தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு. தென்னக நதிகள் இணைப்பு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண ஒத்துழைப்பு ஆகியவை முக்கியமானவைகளாகும்.

ம.தி.மு.க.வுக்கு மொத்தம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் ஆகியோர் ஏற்கெனவே வைகோவினால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாங்கள்தாம் உண்மையான ம.தி.மு.க. என்று அறிவித்து விட்டனர். இந்நிலையில் ம.தி.மு.கவின் விலகலால் மத்திய அரசுக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம் என்று வைகோவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செஞ்சி ராமச்சந்திரனும். எல். கணேசனும் தெரிவித்துள்ளனர்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com