டென்னசி: தீபாவளி கொண்டாட்டம்
அக்டோபர் 29, 2011 அன்று டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளியை நேஷ்வில் விநாயகர் ஆலயத்தில் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தது. சங்கத்தின் புதிய செயலர் ராஜேஷ் கண்ணன் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து புதிய அணியினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பின்னர் வந்த கலை நிகழ்ச்சிகளில் பியானோ, கிடார், டிரம்ஸ், நடனம், பாட்டு என்று இளைய தலைமுறையினர் வெளுத்துக் கட்டினர். ராஜேஷ் கண்ணன் கதை வசனத்தில் நகைச்சுவை நாடகம் ஒன்றை நண்பர்கள் குழாம் வழங்கியது. பின்னர் சங்கத் தலைவர் செந்தில்நாதன் நன்றியுரை வழங்கினார்.

இடைவேளைக்குப் பின்னர் சி.கே. ஐங்கரன், நேஷ்வில் அன்பர்களோடு மேடையேறினார். 'அதோ அந்தப் பறவை போல' என்று தொடங்கி, புதிய பாடல்கள் வரை வெகு சுவையான இசைக் கதம்பமாக வழங்கினார்கள். ரசிகர்கள் விரும்பிக் கேட்டவற்றையும் வழங்கத் தவறவில்லை.



© TamilOnline.com