வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம்: குழந்தைகள் தினவிழா.
நவம்பர் 5, 2011 அன்று மில்பிடாஸ் சமணக்கோவிலில் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடியது. 3,4 முதல், 18 வயது வரையிலான குழந்தைகளின் ஆட்டமும், பாடல்களும், நாடகமும் கண்கொள்ளாக் காட்சி.

சிறிய குழந்தைகளின் கரயோக்கி நிகழ்ச்சி எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியது. எப்போழுதும் போல் திரைப்படப் பாடல்களுக்கு குழந்தைகள் நன்றாக நடனம் ஆடினார்கள். திருமதி. சுகிசிவம் அளித்த சிறுவர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. பண்டைத் தமிழர் கலைகளான சிலம்பாட்டத்தை இடைவேளையில் இணைத்திருந்தது கைதட்டலைத் தட்டிச் சென்றது. திருமதி. கௌரி சேஷாத்திரியின் கம்பநாட்டார் நாடகம் சுவையாக இருந்தது. நிகழ்ச்சியின் நடுவிலே வெங்கடேஷ் பாபு பிங்கோ விளையாட்டு ஏற்பாடு செய்து பரிசுகள் வழங்கினார். குலுக்கல் பரிசுச் சீட்டிலும் சிலர் பரிசுகளைத் தட்டிச் சென்றார்கள்.

குழந்தைகள் தினத்தினைப் பொறுத்தவரையில் குழந்தைகளைத் தயார் செய்த அனைத்து குழுத் தலைவர்களையும் பாராட்ட வேண்டியதுதான். குழந்தைகள் நிகழ்ச்சியைக் குழந்தைகளே தொகுத்து வழங்குவது என்ற பழக்கம் இந்த விழாவிலும் தொடர்ந்தது. நிகழ்ச்சியை ஸ்ருதி கதிரேசனும், விஷ்ணு சரவணனும் தொகுத்தளித்தார்கள்.

பாகீரதி சேஷப்பன்,
ஃப்ரீமாண்ட், கலி.

© TamilOnline.com