'கண்மணியே' மெல்லிசை நிகழ்ச்சி
நவம்பர் 20, 2011 அன்று சபோ கல்லூரி அரங்கத்தில் 'பல்லவி' இசைக்குழு வழங்கிய 'கண்மணியே' மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றமும், சங்கரா கண் அறக்கட்டளையும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். தமிழ் மன்றத் தலைவர் சரவணன் தனது தொடக்கவுரையில் சங்கரா மருத்துவ மனைக்கு நிதி திரட்டும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.

கோயம்பத்தூர் சங்கரா கண் மருத்துவமனைக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டது. இதன் காரணமாக, கோவையை மையக்கருத்தாக வைத்துப் பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. மிகப் பழைய காலத்தில் பெயர்பெற்றிருந்த 'தேசுலாவுதே தேன்மலராலே' என்ற பாடலின் தெலுங்கு வடிவத்தை முரளியும் அவர் மகள் ஜனனியும் பாடி அசத்தினார்கள். 'விழியே கதை எழுது', 'மாமா மாமா மாமா' போன்ற பழைய பாடல்களுடன், பல ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களும், ரீமிக்ஸ் பாடல்களும் வந்தன. சுதா பாடிய 'மன்னவன் வந்தானடி' மிக அருமை. புதிய பாடல்களில் 'மாசி மாசம்', 'உப்புக் கருவாடு' பாடல்கள் நன்றாக இருந்தன. 'பாட்டும் நானே' பாடலில் மிருதங்கம் வாசித்தபடியே கொன்னக்கோல் போட்ட சின்மய் அவர்களுக்கு உற்சாகமான கரகோஷம் கேட்டது. ரஞ்சனி பாடிய 'Who's the hero' ஒரு வித்தியாசமான முயற்சி. ஸ்வேதாவின் குரல்வளம் பாராட்டுகுரியது.

நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த T.T. பாலாஜி பார்வையாளர்களைப் பாட வைத்துக் கலக்கினார். சங்கரா கண் அறக்கட்டளையைத் தொடங்கியவரும், அமெரிக்கக் கிளையின் எக்சிக்யூட்டிவ் சேர்மனுமான முரளி நன்றியுரை ஆற்றினார்.

பாகீரதி சேஷப்பன்,
ஃப்ரீமாண்ட், கலி.

© TamilOnline.com