மீரா ஜெயராமன் பரதநாட்டிய அரங்கேற்றம்
அக்டோபர் 22, 2011 அன்று சங்கல்பா டான்ஸ் அகாடமி மாணவியான மீரா ஜெயராமனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஃப்ரீமான்ட் ஒலோனி கல்லூரியில் நடைபெற்றது. ஆரபி ராகத்தில் விநாயகரைப் போற்றிய புஷ்பாஞ்சலியுடன் தொடங்கியது நிகழ்ச்சி. அடுத்து வந்த சரஸ்வதி தேவியின் புகழ்பாடிய 'சங்கீத சாம்ராஜ்ய சஞ்சாரிணி' பாடலுக்கு மீரா நேர்த்தியாக ஆதிசங்கரரின் வரலாற்றையும் அபிநயித்தது பாராட்டுக்குரியது. நிகழ்ச்சியின் சிகரமாகச் சாருகேசி ராகத்தில் 'இன்னும் என் மனம்' வர்ணத்துக்குக் கண்ணனின் நாயகியாய் சிருங்கார ரசம் சொட்டச் சொட்ட ஆடியது வெகு அழகு. தொடர்ந்து 'சங்கர ஸ்ரீகிரி', 'பாவயாமி கோபால பாலம்', மீரா பஜன் நடனம் ஆகியவை பக்திப் பரவசமூட்டுவதாய் இருந்தன.

பத்மநாபஸ்வாமியின் பெருமை பாடிய தில்லானாவுக்கு அசராமல் தாளத்திற்கேற்பக் கால்களை பேச வைத்த மீரா பார்வையாளர்களைக் கவர்ந்தார். இவ்வளவு நேர்த்தியாக மீரா ஆடியது குரு நிருபமா வைத்யநாதனின் திறமைக்குச் சான்று. ஆஷா ரமேஷ் (பாட்டு), நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியோரின் பின்னணியில் மீரா பரிமளித்தார்.

கோமதி ஷங்கர்

© TamilOnline.com