மதுலிகா கிருஷ்ணன் நாட்டிய அரங்கேற்றம்
செப்டம்பர் 10, 2011 அன்று மதுலிகா கிருஷ்ணன் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. லாஸ்யா நடனப் பள்ளியின் (கூபர்டினோ) 45வது அரங்கேற்றம் இது என்று இந்த நடனப் பள்ளியின் கலை இயக்குனர் குரு வித்யா சுப்ரமணியன் குறிப்பிட்டார்.

கம்பீர நாட்டையில் புஷ்பாஞ்சலியில் தொடங்கிய நிகழ்ச்சி ஊத்துக்காடு கிருதியான 'ஸ்ரீ விக்னராஜம் பஜே' என்று ராஜநடை போட்டது. நிகழ்ச்சியின் மகுடமாக அமைந்தது 'எங்கும் நிறைந்த பரம்பொருளே' என்ற பந்துவராளி வர்ணம். ஏழுமலையப்பனைப் புகழ்ந்து பாடும் இந்த வர்ணத்தின் ஜதிக்கு வெகு நேர்த்தியாக ஆடினார் மதுலிகா.

ஸ்ரீனிவாசப் பெருமாளின் துணைவியார் அலர்மேலு மங்கையைப் போற்றும் 'அலருலு' பாடலுக்கு வெகுநேர்த்தியான அலங்காரத்தோடு மதுலிகா ஆடியது கனகச்சிதம். மற்றுமொரு சிறப்பான நிருத்யம் ஆஷா ரமேஷ் இசையில் 'ஒரு முகத்தைப் பார்த்து' என்ற அருணா கிருஷ்ணன் பாடலுக்கானதுதான். லால்குடி ஜெயராமனின் உற்சாகமான மோகனகல்யாணித் தில்லானாவோடு நிகழ்ச்சி நிறைவெய்தியது.

குரு வித்யா (நட்டுவாங்கம்), ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), என். நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்), ஏ. மஹாதேவன் (மோர்சிங்) என்று பக்க வாத்யம் சிறப்பாக அமைந்திருந்தது.

சான் ஹோசே பள்ளி ஒன்றில் முதுநிலைக் கல்வி படிக்கும் மதுலிகா, நடனம் மட்டுமல்லாமல் மேடைப்பேச்சு, நடிப்பு என்று பல திறமைகள் கொண்டவர்.

© TamilOnline.com