திவ்யா மோகன் சங்கீத அரங்கேற்றம்
ஆகஸ்ட் 6, 2011 அன்று சென்னை, மயிலாப்பூர் ராகசுதா அரங்கில் திவ்யா மோகனின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடந்தது. ஃப்ரீமாண்டில் பிறந்து வளர்ந்த திவ்யா இணையதளம் மூலமாக இசைப்பேரொளி நெய்வேலி சந்தானகோபாலனிடம் நாலரை ஆண்டுகளாக இசை பயின்று வருகிறார்.

பத்தாம் வகுப்பில் படிக்கும் 15 வயதுச் சிறுமி திவ்யாவின் உழைப்பும், குருவின் வழிகாட்டுதலும் அன்றைய கச்சேரியிலே வெளிப்பட்டன. தர்பார் வர்ணத்திலேயே கச்சேரி களை கட்டியது. கமாஸ் ராகத்தில் பாடிய 'சந்தானகோபால க்ரிஷ்ணம்' அவரது குருவுக்கு நிறைவான சமர்ப்பணம். இனிய, தேர்ந்த குரல் வளம் திவ்யாவுக்கு. அடுத்து பந்துவராளியில் பாடிய 'வாடேர தைவமு மனஸா' என்ற தியாகராஜ கிருதி நல்ல பாடாந்தரத்தை வெளிப்படுத்தியது. 'தாத்ரு வினுதுடைன த்யகராஜுனி' என்ற சரணத்தின் வரியை நிரவல், ஸ்வரம் பாடுவதற்குத் தேர்ந்தெடுத்து அனாயசமாக பந்துவராளியைக் கையாண்டார். தொடர்ந்து ஆனந்த பைரவியில் சியாமா சாஸ்த்ரியின் 'மரிவேரே கதி எவ்வரம்மா' கிருதியை அனுபவித்துப் பாடினார் திவ்யா. வரமு ராகத்தில் 'துணை புரிந்தருள் தருண மாதவா' உருக்கமாக இருந்தது. 'காணக் கிடைக்குமோ சபேசன் தரிசனமே, கண்டால் கலி தீருமே' என்ற பல்லவியை கண்டதிரிபுட தாளத்தில் அமைத்து, லாவகமாகப் பாடி முடித்தார். பல்லவி சங்கராபரணத்தில் அமைந்திருந்தது. பல்லவியின் இறுதியில் ஆறு ராகங்களில் ஸ்வரங்களைப் பாடவும் தவறவில்லை. குரு சந்தானகோபாலன் திவ்யாவுக்கென்று இயற்றிய மோகனராகத் தில்லானாவுடன் கச்சேரி நிறைவுற்றது.

ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பத்மா சங்கர் வயலின், பி. கணபதிராமன் மிருதங்கம், எஸ்.வி. ரமணி கடம், ஹம்சா தம்புரா என்று எல்லாருமே திவ்யாவுக்கு பக்க பலமாக இருந்தனர். திவ்யா வயலின் வாசிப்பதிலும் தேர்ந்தவர் என்பது கூடுதல் செய்தி. சிறப்பு விருந்தினராக வந்திருந்த லால்குடி ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன் திவ்யா பாடிய பந்துவாரளியை போற்றிப் பேசினார். “வருடந்தோறும் நடக்கும் 'கிளீவ்லேண்ட்' ஆராதனை விழாவின் போட்டிகளில் திவ்யா பங்கேற்றுக் கடந்த ஆண்டு நான்கு பரிசுகளைத் தட்டிச் சென்றார்” என்றார் 'கிளீவ்லேண்ட்' சுந்தரம்.

சந்திரிகா ராஜாராம்,
ஃப்ரீமாண்ட்

© TamilOnline.com