நிருத்ய சங்கல்பாவின் 'அர்ப்பண்'
ஜுன் 25, 2011 அன்று நிருத்ய சங்கல்பா நாட்டியப் பள்ளியின் 'Arpan – An Offering' (அர்ப்பணம் - ஒரு காணிக்கை) என்னும் நாட்டிய நிகழ்ச்சி, வட க்வின்னட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மிகுந்த கலைத்திறனுடனும் நுணுக்கத்துடனும் நாட்டியத் தொகுப்பை குரு சவிதா விஸ்வநாதன் அமைத்திருந்தார்.

முதலில் கடையநல்லூர் வெங்கட்ராமன் இசையமைத்த, ஆதி சங்கரரின் சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரத்தில் நடராஜரை அழகாக வருணித்துப் பள்ளியின் மூத்த மாணவியர் நாட்டியமாடினர். தொடர்ந்து, லால்குடி ஜெயராமன் இசையில் அமைந்த நிருத்த அர்ப்பணத்தில் தாளமும் இசையும் நளினமான அங்க அசைவுகளாக மாறியது கண்கொள்ளாக் காட்சி. அடுத்து வந்த 'உணரூ பாரதமே'வில் கேரளத்தின் பாரம்பரியக் கலையையும், சிலிர்க்க வைக்கும் கிராமியக் கலையையும் இணைத்து அமைத்திருந்தது மெச்சத்தக்கது. 'அச்சம் அச்சம் இல்லை' என்னும் இந்திரா படப்பாடலுக்கு குட்டிச்சிறுமிகள் ஆடிய நடனம் மயக்கியது. உள்ளுணர்வுகளும், உணர்ச்சிகளும் ஆட்கொண்டிருக்கும் மனிதனின் குணாதிசயங்களை, அதற்கேற்ற முகபாவங்களுடன் விளக்கிய 'வியாக்தித்வா'வை உள்வாங்கி ஆடினர் நிருத்திய சங்கல்பாவின் மூத்த மாணவியர்.

நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியாக வந்த 'கிருஷ்ண பாரதம்' என்னும் நாட்டிய நாடகத்தைப் பல விதமான நாட்டியங்களைக் கற்றறிந்த, கலாக்ஷேத்ர மாணவரான ஷீஜித் கிருஷ்ணா, பலோமி பண்டிட், அனுபமா அருணாபிரசாத் ஆகியோர் சிறப்பாக நடித்தும், நாட்டியமாடியும் காட்டினர். விண்ணுலகம்-மண்ணுலகம், வேதாந்தி-யதார்த்தவாதி, சீர்திருத்தவாதி-பழமைவாதி, மிதவாதி-போராளி போன்ற சிக்கலான கலவைகளைக் கொண்ட கிருஷ்ண பாரதத்தில், சான்றார், தூதுவர், ஒடுக்கப்படுவோருக்கு உதவுபவர், போர்க்கலை வல்லுநர் போன்ற கிருஷ்ணனின் பல முகங்களைத் துல்லியமாகவும், நேர்த்தியாகவும் ஷீஜித் கிருஷ்ணா அபிநயித்தது பிரமிக்க வைத்தது.

இந்த நிகழ்ச்சியின் வருமானம் 'Children Healthcare of Atlanta' என்கிற தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com