அட்லாண்டா தமிழ்ப் பள்ளிகள் ஆண்டு விழா
மே 14, 2011 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) மற்றும் கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின் (CTA) கீழ் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளின் இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பென்சில்வேனியா பல்கலைக்கழத்தில் (UPENN) தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர். வாசு ரங்கநாதன் தலைமை ஏற்றுச் சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக AVION Systems நிறுவனத் தலைவர் காஞ்சனா ராமன் கலந்துகொண்டார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆண்டு விழா தொடங்கியது. ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் ராஜா வேணுகோபால் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்ப் பள்ளிகளின் பெரும் வளர்ச்சி மற்றும் ஜார்ஜியா மாநிலத்தில் தமிழ் மொழிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் (Accreditation) பற்றி ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியரும், GATS கல்விக் குழுவின் தலைவருமான சுந்தரி குமார் விளக்கவுரை ஆற்றினார்.

நாள் தவறாமல் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. குழந்தைகளின் அணிவகுப்பும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஆடல், பாடல் மட்டுமல்லாது நகைச்சுவை நாடகம், வரலாற்று நாடகம், செய்தி வாசித்தல் எனப் பலவகை நிகழ்ச்சிகளைக் குழந்தைகள் நடத்தினர். மழலைகளின் முருகன் துதிப் பாடலும், வாத்து, கிளி, ரயில்வண்டி போல் உடையணிந்து ஆடியதும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடனம் ஆடிக் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். 4 வயது முதல் 15 வயது வரையுள்ளோர் படிக்கும் இந்தப் பள்ளிகளில் சுமார் 230 குழந்தைகள் தமிழ்க் கல்வி பயில்கின்றார்கள். விழாவின் ஒருங்கிணைப்பாளர் அனிதா தங்கமணி விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நன்றி நவிலல், நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவடைந்தது.

ராஜி முத்து,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com