சுனாமி நிதிக்காக அமிர்தானந்தமயி மைய இசை நிகழ்ச்சி
ஏப்ரல் 15, 2011 அன்று கலிஃபோர்னியாவின் சான் ரமோனில் இருக்கும் ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி மையத்தின் அரங்கில், ஜப்பான் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில், சங்கீதா சுவாமிநாதன் அவர்களின் கர்னாடக இசை நிகழ்ச்சி நடந்தது.

சங்கீதா, பந்துவராளி வர்ணத்தோடு கச்சேரியைத் தொடங்கினார். அடுத்து அம்மாவின் தியான சுலோகத்தை விருத்தமாக்கி ஹம்சத்வனியில் 'வாதாபி கணபதி'யை வணங்கி, ஆனந்தபைரவியில் அன்னை மீனக்ஷியின் தரிசனம் கொடுத்து, 'அருள் செய்ய' முருகனை ரசிகப்ரியாவில் வணங்கி, தியாகராஜ சுவாமியின் 'மோக்ஷமு' க்ருதியில், ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரம் அமைத்து அருமையான இசை விருந்து அளித்தார். கர்நாடக இசையின் வலஜி ராகத்தில் முருகனை 'கூவி அழைத்து', பின்னர், அதே ராகம் கலாவதியாக ஹிந்துஸ்தானி இசையில் ஒலித்தது, அவரது இசைஞானத்தை உணர்த்தியது. தொடர்ந்து, சிவரஞ்சனியில் அமைந்த அம்மாவின் பஜனை மனதை நெகிழ்த்தியது. பிறமொழிப் பாடல் வரிசையில், தேஷ் ராகத்தில் 'கார்வர்ணனே' என்னும் மலையாளப் பாடல், கன்னடத்தில் புரந்தரதாசர் கிருதி, சிவன்-ருத்ரம் விருத்தமுடன் கூடிய 'ஈசனே' நேயர் விருப்பமாக அமைந்தன. நிகழ்ச்சி தில்லானாவுடன் இனிதாக நிறைவடைந்தது.

ஸ்ரீராம் (மிருதங்கம்), லக்ஷ்மி (வயலின்) ஆகியோரின் பக்கம் வாசிப்பு பரிமளித்தது.

ஜெயஸ்ரீ நரேஷ்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com