'மரபு' பெர்க்கிலி பல்கலை மாநாடு
2011 ஏப்ரல் 30, மே 1 தேதிகளில் பெர்க்கிலியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏழாவது தமிழ்ப்பீட மாநாடு நடக்கவிருக்கின்றது. இதில் பல பேராசிரியர்கள் கலந்துகொண்டு, ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகிறார்கள். இது பல்கலையில் உள்ள ட்வினெல் ஹாலில் நடைபெறும்.

பேரா. கனகநாயகம் 'தமிழ்ப்பாடல்களின் மரபு' பற்றி உரையாடுகிறார். ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேரா. ஆன் மோனியஸ் தமிழில் தோன்றிய சீவகசிந்தாமணி, நீலகேசி, பெருங்கதை, சூளாமணி போன்ற சைன முனிவர்கள் எழுதிய காவியங்கள் பற்றி ஆராய்கிறார். பேரா. எலைன் கிரடாக் இலக்கியத் திருநங்கைகளைப் பற்றி ஆராய்கிறார். எத்தனையோ கடவுளர் நம் இலக்கியத்தில், பெண்களாக மாறியிருக்கிறார்கள். சிவபிரான் தன்னில் பாதியைக் கொடுக்கிறார். இக்காலத் அரவாணிகள்÷திருமங்கைகள் பற்றியும் இவரது கட்டுரை ஆராய்கிறது.

பேரா. இசபெல் தமிழ்நாட்டின் திருமண உறவுகள் பற்றிக் கட்டுரை வாசிக்கிறார். மாமாவைத் திருமணம் செய்துகொள்வது தமிழ்நாட்டின் வழக்கம். இதன் காரணங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. பேரா. ஜேம்ஸ் ராயன் சீவகசிந்தாமணியை ஆராய்கிறார். ஜெனிபர் கிளேர் இலக்கண நூல்கள் பற்றி ஆய்வு செய்கிறார். பேரா. தவேஷ் சோனேஜீ மாராத்தி கீர்த்தனைகள் எவ்வாறு தென்னிந்தியாவிற்கு வந்து அங்குள்ள மொழிகளிலுள்ள பாடல்களில் கலந்து, ஒரு பாடும் முறையை எவ்வாறு உருவாக்கியிருக்கலாம் என்பது பற்றி ஆய்வு செய்கிறார். பேரா. இத்சுமாத்சு தில்லை நடராஜர் கோவிலில் அர்சசகர்கள், ஓதுவார் இவர்களுக்கிடையேயான பிரச்சனை பற்றி ஆய்வு செய்திருக்கிறார்.

பேரா. ஹாப்கின்ஸ் சம்ஸ்கிருதம் அல்லது தமிழிலிருந்து பாடல்களை மொழிபெயர்க்கும்போது என்னென்ன பிரச்சனைகள் வரலாம் என்பது பற்றி ஆய்கிறார். பேரா. விஜயா நாகராஜன் தமிழர்களின் பொது இடங்கள் பற்றியும், அவைகளின் தமிழ்ப்பண்பாடு பற்றியும் உரையாடுகிறார். மாட் பாக்ஸ்டர், ஈ.வெ.ரா. பெரியாரின் கருத்துக்களைத் தனது கட்டுரையில் ஆய்வு செய்கிறார். பேரா. லெஸ்லி ஓர், 9ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டுவரை கிடைத்த கல்வெட்டுக்கள், மற்ற குறிப்புகள், ஓலைகள், செப்பேடுககள் இவைகளிலிலிருந்து எவ்வாறு வரலாற்றை எழுதினார்கள் என்பது பற்றி ஆய்வுக் கட்டுரை தருகிறார். பேரா. பத்மா கைமல், கைலாசநாதர் கோவில் சிலைகளைப் பற்றியும், இவற்றில் அக்கால அரசர்களுடைய தொடர்பு பற்றியும் ஆய்வு செய்கிறது.

பேராசிரியை வசுதா நாராயணன் 9ஆம் நூற்றாண்டின் வைணவத் திருமண மரபுகள் பற்றி கட்டுரையில் ஆராய்கிறார். பேரா. அர்ச்சனா வெங்கடேசன் நம்மாழ்வாரின் திருவிருத்தம் மற்றும் அதற்கு சீனிவாசர் தந்துள்ள உரை பற்றி ஆய்வுக் கட்டுரை வழங்குகிறார். பேரா. பிளேக் கம்பன், ஒட்டக்கூத்தர் அவர்களது காலம்பற்றி ஆய்வு செய்கிறார்.

பேரா. வாசு ரெங்கநாதனின் கட்டுரை திருமந்திரம் பற்றிய பல இலக்கணக் கருத்துக்களை ஆய்வு செய்கிறது. பேரா. எபலிங் இக்காலத்துப் பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். எலினார் பவர் கணினியால் தமிழ்நாட்டில் என்னென்ன மாற்றங்கள் எழுந்துள்ளன என்பது பற்றி ஆய்வு செய்கிறார்.

அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு: tamil.berkeley.edu

கௌசல்யா ஹார்ட்,
பெர்க்கிலி

© TamilOnline.com