நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடன விழா
மார்ச் 19, 2011 அன்று நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடன விழா ஒன்றை நடத்தியது. இது சிவராத்திரியை ஒட்டிச் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் நாட்யாஞ்சலி நிகழ்ச்சியை முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நியூ ஜெர்சியின் பல நாட்டியப் பள்ளிகள் பங்கேற்றன. இதில் மாணவர்கள் மட்டுமின்றி பள்ளிகளின் குருமார்களும் நடனமாடி விழாவுக்குப் பெருமை சேர்த்தனர். இந்தியப் பெண்மணிகளுடன் பரதக் கலை பயின்ற அமெரிக்க மகளிரும், தசவதாரம் மற்றும் மங்களம் ஆகிய நிகழ்ச்சிகளில் இணைந்து ஆடினர்.

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடத்திய இந்த விழாவில் எட்டு அல்லது ஒன்பது சிறுவர் சிறுமியர்கள் ஜப்பானில் நடந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டினார்கள். முதலில் நடன விழா நடந்த அரங்கத்திற்கு வெளியே ஒரு மேஜை போட்டு வசூல் செய்த அவர்கள் விழா தொடங்கிய பின்னரும் விடவில்லை. அரங்கத்தின் உள்ளே வரிசை வரிசையாகச் சென்று வசூல் செய்து சில மணி நேரத்தில் $825 திரட்டியது. அந்தப் பட்டாளத்தில் இருந்த சுவாதி நாச்சியப்பன், உமா நாச்சியப்பன், கிரீஷ் ஸ்ரீதர், ராகவ் ஸ்ரீதர், கீர்த்தன் குமரப்பன், மகதி பாலமுரளி, சௌமியா சூரி, நிஷ்டா வெங்கடேஷ் ஆகிய வாண்டுகளுக்கு ஒரு சபாஷ்!

பாலமுரளி கோதண்டராமன் மற்றும் லதா,
நியூ ஜெர்சி

© TamilOnline.com