செயிண்ட் லூயிஸ் இந்திய நடன விழாவில் நாட்யா நடனப் பள்ளி
ஏப்ரல் 16, 2011 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ள செயின்ட் லூயிஸ் இந்திய நடன விழாவில் 'நாட்யா நடனப்பள்ளி' பங்கேற்க இருக்கிறது. இந்தியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பு மக்கள் பங்கேற்கும் இவ்விழாவில் எல்லா வகை இந்திய நடனங்களும் அரங்கேறவுள்ளன என்று குறிப்பிட்டார் 'நாட்யா'வின் இயக்குனரான குரு ஹேமா ராஜகோபாலன். 40வது ஆண்டு விழாவைக் காணும் நாட்யாவின் ஹேமா, அமெரிக்கா முழுவதிலும் பயணம் செய்தும், குறிப்பாக சிகாகோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு நடனம் அமைத்தும் வருகிறார். இந்திய கலாசாரத்திற்கும் தற்கால உலகிற்கும் பாலம் அமைப்பதே தம் நோக்கம் என்றும், நடனத்தின் அடிப்படைக் கூறுகளை மாற்றாமல் தருவதே இக்குழு நடனத்தின் சிறப்பு என்றும் இவர் கூறுகிறார் தனி நடனங்கள் மட்டுமின்றி குழு நடனங்களையும் அமைத்து வருகிறார்.

நிகழ்ச்சியின் முக்கிய நடனமான சிவனைப்பற்றி அமைந்த வர்ணம் சிவ வழிபாட்டில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் நிகழ்ச்சியாக இருக்கும். சிவ புராணம் மானுட அபிலாஷைகளையும் போராட்டங்களையும் காண்பிப்பதாகவும், தனிமனித உணர்வின் ஆழத்தில் தொடுவதாக இருப்பதோடு காலத்தைத் தாண்டி நிற்கும் என்றும் கூறுகிறார் இவர். கிருஷ்ணனைப பற்றிய தில்லானாவில் கண்ணனின் குழந்தைக் குறும்புகள் சிறப்பான அபிநயத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும்.

செயின்ட் லூயிஸ் இந்திய நடன விழா 2011, ஏப்ரல் 15 முதல் 17 வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் பரதம் மட்டுமன்றி கதக், ஒடிசி, குச்சிபுடி, மணிபுரி, கதக்களி, மோகினி ஆட்டம் ஆகியவையும் இடம்பெற உள்ளன. அவற்றுடன் கிராமிய நடனங்களான கர்பா, பாங்க்ரா, கோலாட்டம், திம்சா, பிஹு ஆகியவையும் நிகழ்த்தப்பட உள்ளன.

இடம்: கிளேட்டன் உயர் நிலைப் பள்ளி, 1 மார்க் ட்வைன் சர்க்கிள் ,செயின்ட் லூயிஸ்.

நுழைவுச் சீட்டுகள் பற்றிய விவரம் பெற:
இணையதளம் - www.sooryadance.com,
மின்னஞ்சல் - info@sooryadance.com
தொலைபேசி - 314-397-5278, 636-227-9366

ஆங்கிலச் செய்திக்குறிப்பிலிருந்து
தமிழாக்கம்: நித்யவதி சுந்தரேஷ்

© TamilOnline.com