'என் வழி தனி வழி'
தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் நடிகர் விஜயகாந்த் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படுவேகமாகத் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

மேடைதோறும் இரண்டு கழகங்களையும் தாக்கி வருவதுமட்டுமல்லாமல், இரு கழகங்களுக்கும் நாட்டைப் பற்றிய அக்கறையைவிட, பேரம் பேசும் கூட்டணி கட்சிகளை நம்பி, மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன என்றும் குற்றம்சாட்டுகிறார்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு வாய்ப்பளிக்கும்படி கூறும் விஜயகாந்த் மேடைதோறும் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். தான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் ஒழிக்கப்படும், அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைத்துத் தொழில்வளம் பெருக்கப்படும், ரேஷன் பொருட்கள் மக்களின் வீடு தேடி வரும், அரசு வேலையில் இருக்கும் பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்களுக்குச் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.

வரும் ஏப்ரல் மாதத்தில் 40 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தயாராகி வருகிறது. விஜயகாந்த் போகும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுவது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் தி.மு.க கூட்டணிக் கட்சிகளையே அதிகம் விமர்சனம் செய்கிறார், ஆளும் அ.தி.மு.க.வையோ ஜெயலலிதாவையே அதிகம் விமர்சனம் செய்வதில்லை என்கிற கருத்தும் நிலவுகிறது. கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிடலாம் என்று பரவலாக வரும் பத்திரிகைச் செய்திகளை விஜயகாந்த் மறுக்கிறார்.

தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் கூறி வந்தாலும் தேர்தல் நேரம் நெருங்குகையில் இது மாறலாம் என்று பத்திரிகைகள் கணிக்கின்றன.

இவரைப் பார்க்க வரும் கூட்டம் ஓட்டுக்களாக மாறுமா என்பது நிச்சயமில்லை. விரைவில் எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com