டாக்டர் பத்ரிநாத்துக்கு மிசௌரி பல்கலை கௌரவப் பட்டம்
அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக்கழகம் சங்கர நேத்ராலயாவின் நிறுவனர், தலைவர், டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சி மிசௌரி பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 18, 2010 அன்று நடந்தது. இந்த கௌரவம் குறிப்பிட்ட துறைகளில் வாழ்நாள் சாதனை படைத்த சான்றோர்களுக்கு ஒரு சிறந்த குடிமகன் என்ற முறையிலும் மற்றும் அவர்களுடைய தலைமைப் பொறுப்புக்கும் தனிநபர் சேவைக்காகவும் வழங்கப்படுகிறது. "அறிவியல் நிறைஞர்" என்னும் இப்பட்டம் மிகப் பெரிய கௌரவ விருது ஆகும். இந்த விருது பிரபல எழுத்தாளரும், தத்துவ ஞானியுமான மார்க் ட்வெய்னுக்கு 1902ம் ஆண்டில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தனது ஏற்புரையில் டாக்டர் பத்ரிநாத், "இந்த கௌரவம் தனிப்பட்ட முறையில் எனக்கு வழங்கப்பட்டதாக நினைக்கவில்லை. இது நான் பிரதிநிதித்துவம் வகிக்கும் சங்கர நேத்ராலயாவிற்கே கிடைத்ததாகப் பெருமையடைகிறேன்" என்றார். மேலும் தன்னுரையில், மனிதனுக்கு ஆற்றும் தொண்டு இறைவனுக்கு ஆற்றும் தொண்டு என்று குறிப்பிடுவதைப் போல 'வித்யா தானம்' வழங்குவது, ஒரு தனிநபரை அவருக்குக் கல்வி வழங்குவதன் மூலம் அவருடைய ஆற்றலை மேம்படுத்துவதை மிகச் சிறந்த சேவையாகத் தாம் கருதுவதாகக் குறிப்பிட்டார். "நான் கண் மருத்துவத்தில் எனது கல்வியையும் பயிற்சியையும் அமெரிக்காவில்தான் பெற்றேன். இங்கே நான் பெற்ற பயிற்சி என்னைப் போன்ற ஒரு தனிமனிதனைத் தன்னம்பிக்கை உள்ளவனாகவும், மிகச் சிறந்த செயல்வன்மை மிக்கவராகவும் மாற்றும் சக்தி படைத்ததாகும். இது உங்களை ஒரு தகுதி வாய்ந்த மருத்துவராக உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் ஒரு முழுமைபெற்ற மனிதனாகவும் மாற்றும்" என்றார்.

"சங்கர நேத்ராலயா ஒரு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் ஆகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் சங்கர நேத்ராலயாவிற்கு வந்து கடினமான மருத்துவ முறைகளைச் சிறப்பாகப் பயின்று தங்கள் மருத்துவமனைகளில் செயல்படுத்துகிறார்கள்" என்றார். மேலும் "கல்வி என்பது ஒரு தனிமனிதனை அவனுடைய எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமல்ல, ஒரு தேசத்தை மேம்படுத்துவதற்காகவே" என்றும் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் பிரேட்லி டியேட்டன், முதல்வர் டாக்டர் ராபர்ட் சர்ச்சில், துணை முன்னவர் டாக்டர் ஹேண்டி வில்லியம்சன், இயற்பியல் பேராசிரியர் டாக்டர் ராபர்ட் ஒயிட், டாக்டர் கட்டேஷ் கட்டி, டாக்டர் கண்ணன் ரகுராமன், டாக்டர் வசந்தி பத்ரிநாத் மற்றும் சங்கர நேத்ராலயாவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கிருஷ் வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதே சமயத்தில் சங்கர நேத்ராலயா, தன் இலவச சேவைக்காக 'ஸ்வாஸ்த பாரத் சம்மான்' விருது, ஐசிஐசிஐ லொம்பார்ட் மற்றும் சி.என்.பி.சி தொலைக்காட்சி வழங்கும் 2010ம் ஆண்டிற்கான கண் மருத்துவப் பிரிவிற்கான சுகாதார சேவை விருது, பாரதத்தின் பிரபல ஆங்கில வார இதழான 'தி வீக்' மற்றும் ஹன்சா நடத்திய கள ஆய்வில் மிகச் சிறந்த கண் மருத்துவச் சிறப்பு மருத்துவமனை என்ற சிறப்பிடம் ஆகியவற்றோடு, அக்டோபர் 2010ல் சிகாகோவில் நடைபெற்ற கண் மருத்துவத்திற்கான அமெரிக்கன் அகாதமியின் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட இந்தியாவின் முதல் மின்மருத்துவ ஆவண மேம்பாடு கண் மருத்துவமனை போன்ற சிறப்புகளையும் பெற்றுள்ளது.

டாக்டர் பத்ரிநாத் சங்கர நேத்ராலயாவை 1978ல் நிறுவினார். இன்று இந்தியாவின் தலைசிறந்த கண் மருத்துவமனைகளில் ஒன்றாகவும், உலக அளவில் தனது சிறப்பான தரம் மற்றும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கண் மருத்துவ சேவைக்காகவும் இது சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆசியாவிலேயே ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்ற முதல் கண் மருத்துவமனை என்ற முத்திரை பதித்துள்ளது. சங்கர நேத்ராலயா சென்னை நகரில் ஐந்து கிளைகளையும் மேலும் ராமேஸ்வரம், கொல்கத்தா, பெங்களூரு போன்ற ஊர்களில் தலா ஒரு கிளையுடனும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com