ராதிகா, ரம்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
புஷ்பாஞ்சலி டான்ஸ் அகாடமியைச் சேர்ந்த ராதிகா கண்ணன் மற்றும் ரம்யா கண்ணனின் ஆடல் அரங்கேற்றம், 'மக்காஃபி நிகழ்கலை' அரங்கத்தில் நடைபெற்றது. புஷ்பாஞ்சலிக்குப் பின் எம்பெருமானின் சிறப்புகளை உணர்த்தும் 'தோடுடைய செவியன்' என்னும் தேவாரப்பாடலுக்கான நடனம். அடுத்து வந்த வர்ணத்தில் ஐங்கரனுக்கு ஆனைமுகம் வந்த வரலாறும் வள்ளி திருமணமும் சித்திரிக்கப்பட்டன. அறிதுயில் அரங்கனைப் போற்றும் தசாவதாரப் பாடலுக்குச் சகோதரிகள் திறமையுடன் ஆடினர். உமையவள் திருமணத்தை விவரிக்கும் 'தோரணப் பந்தலிலே' பாடலுக்கு ரம்யா ஆடிய விதம், அனைவரையும் திருமண மண்டபத்துக்கே அழைத்துச் சென்றது.

அளவிடற்கரிய பெருமை கொண்ட ஆடலரசனின் திறமையையும், அவர் வகுத்த நாட்டிய இலக்கணத்தையும், மிக்க நளினத்துடனும் பொருத்தமான பாவத்துடனும் விளக்கியது ராதிகாவின் 'சங்கர ஸ்ரீ கிரி' பாடலுக்கான நடனம். முருகன் வள்ளியை மணம் புரிய நிகழ்த்திய திருவிளையாடலை ரம்யா உற்சாகத்துடனும் களிப்புடனும் ஆடினார். 'கண்ணன் வரும் நேரம்' என்ற பாடலில் ராதிகா வந்திருந்தோரை துவாபர யுகத்திற்கே கூட்டிச் சென்றுவிட்டார் என்றார் மிகையல்ல.

இறுதியாகத் தில்லானாவில் குரு ஸ்ரீமதி மீனா லோகன் அவர்களின் நட்டுவாங்கத்துக்கு இருவரும் திறம்பட ஆடி குருவுக்குப் பெருமை சேர்த்தனர். நிகழ்ச்சி மங்களத்துடன் இனிதே நிறைவுற்றது.

நரேந்திர குமார்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com