சிகாகோ தங்கமுருகன் விழா
டிசம்பர் 11, 2010 அன்று சிகாகோவிலுள்ள லெமாண்ட் திருக்கோவில் வளாகத்தில் 10வது ஆண்டு தங்க முருகன் விழா நடந்தது. விழா தொடங்குமுன் முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டுத் தங்க முருகன் ஊர்வலமாக அரங்கத்துக்குக் கொண்டுவரப்பட்டார். விழாவை மேரிலேண்ட் லன்ஹாம் முருகன் கோவில் நிறுவனர் டாக்டர் கோபால் குருஸ்வாமி அவர்கள் துவக்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். நிவேதா சந்திரசேகரின் துதியோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து டாக்டர் ராம்சாய்பாலா குழுவினரின் முருகன் பாடல்கள் பஜனை நடைபெற்றது. இரவு 10 மணிவரை நடந்த நிகழ்ச்சிகளில் சிறுவர் சிறுமியரின் ஆடல், பாடல், நாடகம் யாவும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாயின.

திருமதி. ஆனந்தி ரத்னவேலு சுவாமிமலை முருகன் கோவிலின் அமைப்பு, சிறப்புகள் பற்றிப் பேசினார். காவடி ஆட்டம், குறத்திக் கூத்து, வள்ளி நாட்டியம் எனப் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கெண்டகி லூயிவில்லியிலிருந்து தனது குழுவினருடன் வந்திருந்த குரு வந்தனா அகாதமியைச் சேர்ந்த திருமதி. அகிலா அய்யர் சிறப்பான நடன நிகழ்ச்சியைத் தந்தார். டெட்ராயிடிலிருந்து வந்திருந்த சிறுவனின் நாட்டியமும் அசத்தல்.

தி தமிழ் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் கவிமாமணி இலந்தை சு. ராமசாமி முருகனின் முற்பிறப்பு என்னும் தலைப்பில் புதுமையான கருத்துகளை எடுத்துரைத்து மக்கள் வியக்கும் வண்ணம் சொற்பொழிவாற்றினார். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சீடர் திரு. ஞானமலர் ராமலிங்கய்யா சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்துகொண்டார்.

விழாவின் முத்திரை நிகழ்ச்சியான 'லிட்டில் முருகன்' வேட நிகழ்ச்சியில் பல சிறுவர்களும் குழந்தைகளும் முருகனாக மேடையில் தோன்றினர்.

தொடர்ந்து நடந்த 'வீரபாகு தூது' சிறு நாடகம் எல்லோரையும் கவர்ந்தது. அதில் சூரனாகப் பங்கேற்ற பூமா சுந்தரும் வீரபாகுவாக நடித்த சிறுவன் சுமேஷ் சுந்தரேசனும் அற்புதமாக நடித்தனர். கடம்பன் இடும்பன் நாடகம் வைதேகி குழுவினரால் நடத்தப்பட்டது. மற்றொரு சிறப்பு நிகழ்ச்சி ஆர்க்கெஸ்ட்ராவுடன் கந்தரனுபூதிப் பாடல்களைப் பாடியது. இருபதுக்கு மேற்பட்ட வயலின் கலைஞர்கள் இதில்கலந்து கொண்டனர். மினு பசுபதி மற்றும் சுபத்ரா ராமசாமி இணந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக அமைத்திருந்தனர். வெங்கடேஷ பத்மநாபன் நிகழ்ச்சியை நடத்தினார். ஐங்கரனும், மினு பசுபதியும் முருகன் பாடல்களைப் பக்தி மணம் கமழப் பாடியது சிறப்பு.

விழாவைச் சிறப்பாக நடத்த உதவிய பூமா சுந்தர், ராதாகிருஷ்ணன், உமா, சிவசுப்ரமணியன், வைதேகி சுந்தர்ராமன், ஹேரி சங்கர், சோமு, கலை, புவனா, உமாபதி, குமார், புஷ்பா, தேவகி ராமன், மீனா சிவா, வசுதேவன் தனுஜா, லலிதா ராஜகோபாலன், சுபத்ரா, குழலி, உமா கோபாலகிருஷ்ணன், சோபனா சுரேஷ், சீனிவாசன், மஹேஸ்வரி ராஜகோபால், சிவராமன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

இலந்தை சு.ராமசாமி,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com