அனு நடராஜன்
ஃப்ரீமான்ட் நகரவை உறுப்பினராக இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் திருமதி. அனு நடராஜன் (பார்க்க: தென்றல், அக்டோபர் 2010). 10 வேட்பாளர்களுக்கு நடுவே அதிக வோட்டுகள் வாங்குவது சாதாரணமானதல்ல. வெற்றி பெறும்வரை அதுவே குறிக்கோள் போலத் தோன்றினாலும், அது ஒரு பெரிய பொறுப்பாளுகையின் முதல் அடிதான் என்பதை உணர்ந்தவர் அனு. நாற்காலியோடு சேர்ந்து வரும் முதல் எண்ணங்கள் என்ன என்பதை அவரிடம் கேட்டோம்....

கே: வாழ்த்துக்கள். உங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணங்கள் என்னென்ன?
ப: நல்ல திட்டமிட்ட பிரசாரம். என்ன செய்யப் போகிறோம், என்ன செய்திருக்கிறோம் என்பவற்றை வாக்காளர்களுக்குச் சரியாக் எடுத்துச் சொன்னது. வீடு வீடாகப் போய் விளக்கம் தந்த தொண்டர்கள், நிதி திரட்டியவர்கள் என்று பலரின் உழைப்பு. மற்றொரு முக்கிய விஷயம், நல்லதைச் சொன்னோம், விஷமப் பிரசாரத்தை எதிர்த்துப் பேசவில்லை. அனுபவசாலிகளும் புதியவர்களும் என்று எனக்காக அயராமல் உழைத்தவர்களைப் பார்த்து எனக்கும் குறைவற்ற உற்சாகம் ஏற்பட்டது.

கே: உங்கள் பிரசாரத்தின் இரண்டு முக்கியமான அணுகுமுறைகளைச் சொல்ல முடியுமா?
ப: முதலில் நேர்மறையான பிரசாரம். மற்ற வேட்பாளர்கள் மோசம் என்று பேசாமல், எனது பலங்களை எடுத்துச் சொன்னோம். தெளிவான நோக்கம் கொண்ட சரியான செய்தியைக் கேட்க மக்கள் விரும்புகிறார்கள்.

தொண்டர்களை ஒருங்கிணைத்து, பொறுப்பான முறையில் பிரசாரத்தை நடத்தியது இரண்டாவது முக்கிய விஷயம். ஒரு வேட்பாளரின் பின்னால் சமூகம் அணிதிரள்வதை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். அதைச் செலவுமிகுந்த டி.வி. விளம்பரங்களால் சாதிக்க முடியாது. அதைவிட ஒரு நண்பரின் வார்த்தைக்கு மதிப்பு அதிகம்.

நான் யார், என் நோக்கம் என்ன என்பவற்றைப் பற்றித் தெளிவாக, மாற்றங்கள் இல்லாமல் எடுத்துச் சொன்னது மூன்றாவது முக்கிய அம்சம். நன்கு வடிவமைக்கப்பட்ட எனது ஆரஞ்சுச் சின்னம் மக்களுக்குப் பிடித்திருந்தது. சிறிய விஷயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தினோம்.

கே: இந்தத் தேர்தலில் நீங்கள் கற்ற, வரும் நாட்களில் மிகப் பயனுள்ளதாக இருக்கப் போகும், ஒரு விஷயம் என்று எதைச் சொல்லுவீர்கள்?
ப: கவுன்சில் உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தூரம், 'நீயா, நானா' என்ற எதிரணி மனப்பான்மை - இந்த தூரத்தைக் கடந்தாக வேண்டும் என்பதே நான் கற்ற முதல் பாடம். நாங்கள் ஒரே அணியில் இருக்கிறோம், ஒன்றாக உழைக்க வேண்டும் என்பதை உணர, உணர்த்த வேண்டும். இப்போதிருக்கும் கடுமையான பொருளாதாரச் சூழலில் எங்கள் கையிலிருக்கும் பணியும் கடினமானது. சமுதாயத்துக்குத் தேவைப்படும் சேவைகளைத் தருவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்தாக வேண்டும். அடுத்த இரண்டாண்டுகளுக்கு அதுதான் என் வேலை.

உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன், மதுரபாரதி

© TamilOnline.com