AIM for Seva வழங்கிய 'தேஷ்'
அக்டோபர் 3, 2010 அன்று மிச்சிகனில் AIM for Seva அமைப்பினர் 'தேஷ்' என்ற பல்கலை நிகழ்ச்சியை கன்ட்ரி டே பள்ளி அரங்கத்தில் நிகழ்த்தினர். சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவின் பட்டி-தொட்டிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிகள் அமைத்து, கல்வியறிவு புகட்டி அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவ அமைக்கப்பட்டதாகும். இப்பணிக்கு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் எண்பது குழந்தைகள் பங்கேற்றனர்.

விழா, கிடாரில் வாசித்த அமெரிக்க தேசிய கீதத்துடன் தொடங்கியது. பிறகு லலிதா ரவியின் இசைப்பள்ளி மாணவர்கள் இசை நிகழ்ச்சி வழங்கினர். முதலில் பிள்ளையார் பஜனைப் பாடல் ஒன்றைப் பாடினர். பிறகு, சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய 'குரு சேவாம் த்வம்' என்ற 'தேஷ்' ராகப் பாடலை, மிருதங்கம், வயலின், குழல் ஆகிய பக்க வாத்தியங்களோடு பாடினர்.

சுவாமிஜியை வரவேற்கும் விதமாக 'கலாக்ஷேத்ரா' பள்ளியைச் சேர்ந்த கலைஞர்கள் 'செண்டை' வாத்தியத்தை முழக்கினர். அடுத்து திருமதி ரூபா சியாமசுந்தரா அவர்களின் 'நிருத்யோல்லாஸா' பள்ளி மாணவர்கள் 'தேஷ்' என்ற பரதநாட்டியத்தை வழங்கினர். பாரதத்தின் பாரம்பரியத்தில் எப்படியெல்லாம் சேவை கையாளப்பட்டது என்பதைக் குறித்து நடந்த இந்நாட்டிய நிகழ்ச்சியில், ராமாயண மகாபாரதத்தில் சேவையின் உதாரணங்கள், குருமார்களின் சேவை, சுதந்திரப் போராட்ட வீரர்களின் சேவை, உழவர்களின் சேவை எனப் பலவகை சேவைகள் சித்திரிக்கப்பட்டன.

விழாவின் ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்ரீநி.வி. ராமன் நிதி வழங்கிய கொடை வள்ளல்களை அறிமுகம் செய்தார். முத்தாய்ப்பாகப் பேசிய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் நாம் அனைவரும் நுகர்வோர் (Consumer). நமக்குக் கொடுக்கவும், அதாவது 'தானம்' செய்யவும், தெரிய வேண்டும் என்று கூறினார். குடிமக்களுக்கு நாட்டின்மேல் உரிமையும் எதிர்பார்ப்பும் தேவை. அதேபோல் நாட்டுக்கும் பிரஜையின் மேல் எதிர்பார்ப்பும் உரிமையும் தேவை. இது கணவன்-மனைவி உறவை ஒத்தது என்று கூறினார். ஆசியுரையுடன் விழா நிறைவெய்தியது.

© TamilOnline.com