கொள்ளு குருமா
தேவையான பொருட்கள்
முளை கட்டிய கொள்ளு - 1 1/2 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் (துருவியது) - 1/4 தேக்கரண்டி
முந்திரி - 4
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கொத்துமல்லித் தழை (நறுக்கியது) - 1/4 கிண்ணம்

செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சூடான பின் பிரிஞ்சி இலை, சோம்பு போடவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டு நன்றாக வதக்கவும். வதக்கிய பொருட்களுடன் மஞ்சள் தூள், தனியா பொடி மற்றும் கரம்மசாலா போட்டு நன்றாகப் பிரட்டவும். ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மஞ்சள் தூளின் பச்சை வாசம் போகும்வரை நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதித்த பின்பு வேகவைத்த முளைகட்டிய கொள்ளை அத்துடன் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். தேங்காய் மற்றும் முந்திரியை அரைத்துச் சேர்க்கவும். குருமா சேர்த்து வரும்பொழுது கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும். இந்தச் சத்தான, சுவையான கொள்ளு குருமாவை, சப்பாத்தி, பூரி, பரோட்டா, நான் என்று எந்தவகை இந்திய பிரெட்டுடனும் சாப்பிடலாம்.

நித்யா பாலாஜி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com