முரளி
இளமை நாயகன் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் முரளி (47) மாரடைப்பால் காலமானார். பாலசந்தரால் பூவிலங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட முரளி, பல வெற்றிப் படங்களில் நடித்து முத்திரை பதித்தார். பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவனாகவும், காதல் நாயகனாகவும் நடித்தார். பகல்நிலவு, இதயம், புது வசந்தம், பொற்காலம், காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றிக்கொடி கட்டு, கடல் பூக்கள், தேசிய கீதம் போன்ற இவரது படங்கள் முக்கியமானவை. தனது மகன் அதர்வா கதாநாயகனாக நடித்த 'பாணா' படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். ஆர்ப்பாட்டமில்லாத, பழக எளிதான, மென்மையான சுபாவம் கொண்டவர். சமீபத்தில்தான் இவரது மகளின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நூறாவது படத்துக்கு ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில் திடீரென முரளி காலமானார்.



© TamilOnline.com