கார்த்திகா அசோக் நாட்டிய அரங்கேற்றம்
ஜூலை 10, 2010 அன்று செல்வி. கார்த்திகா அசோக்கின் இரட்டை அரங்கேற்றம் நடந்தது. ஆமாம், முதலில் பரதநாட்டியமும் பின்னர் மோஹினியாட்டமும் ஒரே நிகழ்வில் அரங்கேற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கமான புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து, கமாஸ் ராக தரு வர்ணத்திற்கு அற்புதமாக ஆடி, தேவி மீனாட்சியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார் கார்த்திகா. இந்த ராகம் பாடவே சற்று சிரமம் என்றாலும் இதற்கு நேர்த்தியாக ஆடினார் கார்த்திகா. தொடர்ந்து குருவாயூரப்பன் பற்றிய பதத்துக்கு கண்ணனின் லீலைகள் பற்றி விதவிதமான பாவங்களுடன் ஆடியது ரசிக்கும் விதத்தில் இருந்தது. மோஹன கல்யாணி தில்லானாவில் மிருதங்கத்துக்கு ஏற்றவாறு ஜதியும் அடவும் நிருத்யமும் ஆடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இடைவேளைக்குப் பிறகு மோஹினியாட்டம். பெயருக்கேற்ப இது பெண்கள் மட்டுமே ஆடும் கேரளத்து நடனவகை. முதலில் ராகமாலிகையில் கணேச வந்தனம். அங்க அசைவுகளையும் அடவுகளையும் திருத்தமாக ஆடினார். இதில் ஸ்வாதித் திருநாளின் தன்யாசி ராக வர்ணத்தில் ஸ்ரீ வாமன அவதாரத்தைக் கண்முன் நிறுத்தினார். கடைசி நிகழ்ச்சியாக தனாஸ்ரீ ராக தில்லானா முத்தாய்ப்பாக இருந்தது. பாபு பரமேஸ்வரன் அவர்கள் மகன் விஜய கிருஷ்ணா நன்றாகப் பாடினர். ஊக்கத்துடன் உழைத்து ஆடிய கார்த்திகாவும், அவருக்கு பரதம் கற்பித்த குரு பத்மினி வாசனும், மோஹினியாட்டம் கற்பித்த குரு கிரிஜா சந்திரனும் நிச்சயம் பெருமைப்படலாம்.

இந்திரா பார்த்தசாரதி,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com