அபிநயாவின் 30வது ஆண்டு விழா
June 26, 2010: சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியின் பிரபலமான அபிநயா நாட்டிய நிறுவனம் தன்னுடைய 30வது ஆண்டு சிறப்பு விழா விவரங்களை அறிவித்துள்ளது. கலை நிர்வாக இயக்குனர் திருமதி மைதிலி குமார் அவர்கள் அபிநயா நாட்டிய நிறுவனத்தை 1980ல் துவக்கினார்.

“எங்கள் நெடிய பயணத்தில் அபிநயாவுக்கு உதவிவரும் பல இசைக்கலைஞர்கள், பண்டிதர்கள், தொண்டர்கள், ஆசிரியர்கள், நிறுவன அங்கத்தினர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை அங்கீகரித்து இந்த ஆண்டில் கௌரவப்படுத்துவோம். என்னுடைய நடனத்திற்கு ஊக்கமளித்த என் பெற்றோர், மாணவர்கள் மற்றும் ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி” என்றார் மைதிலி குமார்.

இந்த ஆண்டில் இந்தியாவின் மதம், புராணம் மற்றும் தற்கால இலக்கியங்களால் உந்தப்பட்ட அபிநயாவின் களஞ்சியம் வழியாகத் தொன்மையான பரத நாட்டியத்தின் வளர்ச்சியை அபிநயாவின் நிகழ்ச்சிகள் சித்திரிக்கும். தென் வளைகுடாப் பகுதியில் பாரம்பரியமும் புதுமையும் சேர்ந்த கூட்டு-நிகழ்ச்சிகளைத் தரும் அபிநயா, ஒரு முன்னோடி பல்வகை-கலாசாரச் சங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

30வது ஆண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள்
பிரபல நாட்டிய குரு, இயற்றுனர், நடன அமைப்பாளர் திரு சி.வி. சந்திரசேகர் மற்றும் திருமதி ஜெயா ஆகியோர் ஒரு வாரம் (ஜூன் 20 முதல் 27 முடிய) நாட்டியப் பயிற்சி முகாமும், நாட்டிய நிகழ்ச்சியும் நடத்தினார்கள்.

ஜூன் 20ம் தேதி குரு சந்திரசேகர் ஒரு விசேட வகுப்பு நடத்தினார். அதில் அடவு மற்றும் ஜதியைக் கற்றுக்கொள்வது ஞாபகமும் நல்ல பயிற்சியையும் தாண்டியது. ஓர் அலாரிப்பு முழுதும் கண்களால் காண்பித்து கண்ணசைவின் முக்கியத்துவத்தைக் காண்பித்தார்.

குரு சந்திரசேகர் நடன அமைப்புச் செய்த 'குரு பரம்பரா’ என்னும் நிகழ்ச்சியை கலைஞர்கள் ஆஷா ரமேஷ், நாராயண், சாந்தி நாராயண், மற்றும் ஜெயா சந்திரசேகரின் இசையோடு ஜுன் 27ம் தேதி நடத்தியது. 77 வயதைச் சற்றும் காட்டாத நுணுக்கங்களுடன் குரு சந்திரசேகர் கணேச வந்தனம் மற்றும் சூர்தாஸ் பஜனுக்கு நடனமாடினார்.

வரும் நாட்களிலும் தனித்தும் பிற அமைப்புகளோடு சேர்ந்தும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

விவரங்களுக்குப் பார்க்க: www.abhinaya.org
மின்னஞ்சல்: abdanco@gmail.com
Facebook, Twitter
தொலைபேசி: (408) 871-5959

ரவி ரங்கநாதன்

© TamilOnline.com