அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் மூன்றாவது ஆண்டு விழா
மே 8, 2010 அன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் மூன்றாவது ஆண்டுத் தொடக்க விழா செயின்ட் அலெக்சாண்ட்ர் பள்ளி அரங்கம், வில்லா பார்க், இல்லினாய்ஸில் சிறப்பாக நடைபெற்றது. மேடையில் 12:30 மணிக்குத் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள் இசைத்த வள்ளுவரின் திருக்குறள் பாக்கள், ஒளவையின் ஆத்திசூடி, சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சி தொடங்கியது.

கெர்ணி தமிழ்ப்பள்ளி மாணாக்கர்களின் தத்துவப்பாடல்களுக்குப் பின்னர், 'தமிழில்தான் பேசிடுவோமே' நிகழ்ச்சி. சளைப்போமா நாங்கள் என்ற வீறுடன் பாரதியையும், வள்ளுவரையும் துணைக்கழைத்தனர் டேரியன் தமிழ்ப்பள்ளி மாணாக்கர் செல்வி. சுபாவும், செல்வன். ஆகாசும். நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி மாணவி செல்வி. நிறைமதி மழையெனத் திருக்குறள்களைப் பொழிந்து சென்ற ஆண்டு பெற்ற திருக்குறள் சொல்லுதல் போட்டியின் முதற்பரிசை இவ்வாண்டும் தக்க வைத்துக்கொண்டார். அடுத்து அமைந்த நிலைகள் ஏழுதனை செல்வன். கெளதம், நித்தின், செல்வி. தேட்சணா, செல்வன். நீலன் செல்வி முகிழ்த்தா, மனுசா பெற்று, தாம் கூறிய குறள் ஒவ்வொன்றுக்கும் தாலர் ஒன்று எனப் பரிசிலாகப் பெற்றனர்.

அடுத்து மன்சுடர், இன்டியானா தமிழ்ப்பள்ளி மாணாக்கர் விளக்கிய “வார நாட்கள் – ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்” என்ற அழ. வள்ளியப்பாவின் பாடல் சிறார் செவியில் இனித்தது. அடுத்து வந்த நேப்பர்வில் தமிழ்ப்பள்ளி மாணாக்கர் தமிழ் மாதங்கள், கறுப்பு யானை, அணிலும் ஆடும், காகம், சிட்டுக்குருவி, தேச பக்தி எனப் பல்வேறு நிகழ்வுகளை அரங்கேற்றினர். போதாததற்கு, 'கடினமானது எது', 'சர்க்கரை மனது' இரண்டு நாடகங்கள் வேறு!

கொடுத்த எழுத்துக்கள் ஐந்தில், கொடுத்த நேரத்துக்குள் சொற்கள், சொற்றொடர்கள் பலவற்றை எழுதி முடித்து தத்தம் வகுப்பு நிலையில் முதல் நான்கு பரிசுகளை பத்மா, சுபா, காயத்ரி, சிரிநிதி, பிரீதீபா, அனுக்சா, கவிதா, அனன்னியா, ஆகாசு, நித்தின், கெளதம், நீலன் ஆகியோர் பெற்றனர்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் திரு சாக்கரடீசு., திருவாட்டி இரம்யா தமது முயற்சியால் இவ்வாண்டு சொல் காட்டு, சொற்சிலம்பம், பழமொழி விளக்கு போன்ற போட்டிகளால் கூடியிருந்த பெற்றோர்கள் மெய்மறக்கச் செய்தனர். (சொல் காட்டு – கொடுத்த சொல்லைத் தமிழில் மாணாக்கர் சிலர் விளக்க, அந்தச் சொல்லை எழுதுதல்; வானத்திலிருந்து வரும் தண்ணீர்-மழை)(சொற்சிலம்பம்–கொடுத்த சொல்லின் கடையெழுத்து கண்டு, அவ்வெழுத்தில் தொடங்கும் சொல்லைக் கூறல்; அம்மா, மாம்பழம், பல், பல, பழம் என்பது போல). (கொடுத்த பழமொழியின் பொருளை ஆங்கிலத்தில் விளக்க அதற்கிணையான தமிழ்ப் பழமொழியைக் கூறல்). இந்த போட்டிகளைத் திருவாட்டி இரம்யா, திரு, வேலு, சிற்றரசு ஆகியோர் திறம்பட நடத்தினர். வெற்றி பெற்ற மாணக்கர்கள் செல்வி, பார்வதி, சிரீநிதி, நிறைமதி, செல்வன். கெளதம், நீலன், நித்தின் ஆகியோர் ஆவர்.

போட்டிகளைத் தொடர்ந்து தம் திறமை காட்ட விழைந்தனர் சாம்பர்க் தமிழ்ப்பள்ளி (அமைப்பில் பெரும்பள்ளி) மாணாக்கர்கள். பாரதியின் 'ஓடி விளையாடு பாப்பா' என ஆரம்பித்து, 'ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்', 'தோசை அம்மா தோசை' எனப் பல பாடல்கள். ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னரும் “அப்புறம், அப்புறம், அப்புறம்“ எனக்கூறித் தன் கதையை அரங்கம் முழுமையும் கூற வைத்த 4 வயதுச் சிறுமி மசுமி சப்பானியத் தாய் வயிற்றுப்பெண் (தாயும் தமிழ்ப்பள்ளீயில் தமிழ் கற்றவர்)!

சாம்பர்க் தமிழ்ப்பள்ளி 'பேராசையும் பெரு நட்டமும்', 'தமிழர் புகழ்', 'சமையல் திரு விளையாடல்' எனப் பெரும் நாடகங்களை அரங்கேற்றியது.

தமிழ்ப்பள்ளி நடைபெறத் தம் உழைப்பை நல்கும் ஆசிரியர்க்குத் திரு வேலாயுதம் அவர்கள் பரிசளித்த பின்னர் திரு. வேலு அன்னையர் தின வாழ்த்துக் கவிதை கூறினார். இடம் தந்து ஆதரித்த செயின்ட் அலெக்சாண்டர் பள்ளி நிர்வாகிகளுக்கும், ஆண்டு விழாவிற்கான நற்சான்றிதழ்களை வழங்கிய 'தென்றல்' இதழுக்கும், உணவு படைத்த “தட்சண்” உணவகத்துக்கும் சாம்பர்க் தமிழ்ப்பள்ளி இணைப்பாளர் திரு. முரளி நன்றி கூற, விழா இனிதே முடிந்தது.

வ.ச. பாபு,
இல்லினாய்ஸ்

© TamilOnline.com