ராகவாணி இசைப்பள்ளி இசை விருந்து
மே 15, 2010 அன்று சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரத்தில் ராகவாணி இசைப்பள்ளியின் தலைமை நிர்வாகியும், குருவுமான திருமதி லலிதா வெங்கட்ராமன் அவர்களின் சிஷ்யர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். முதலில் ஸ்ரீதர் கோபால கிருஷ்ணனின் வீணைக்கச்சேரி அமைந்தது. கீர்த்தனைகளுடன், இறுதியாக அவர் வழங்கிய இங்க்லீஷ் நோட் வெகு சிறப்பு. மிருதங்கத்தில் பாலாஜி மகாதேவன் அசத்தினார். தொடர்ந்து, சத்குரு தியாகராஜ சுவாமியின் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற தலைப்பில் 11 கீர்த்தனைகளை வழங்கினர். இதில் ஸ்ரீமத் பாகவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 9 பக்தி இலட்சணங்களும் விவரிக்கப்பட்டன. குருவுடைய கற்பனைத் திறனுடன் கூடிய பிரகலாத பக்தி, ஹிரண்ய கசிபுவுடன் உரையாடல், பகவான் தோன்றி சிறுவனை ஆனந்தத்தில் திளைக்க வைப்பது என அனைத்தும் கண்முன் நிறுத்தப்பட்டது.

தொகுத்து வழங்கிய ஸ்ரீவித்யா நாராயணன் பக்தியின் எல்லைக்கே வந்திருந்தோரை அழைத்துச் சென்றார். கீர்த்தனைகள் பாடிய பிரமிளா சீனிவாசன், தாரா பிச்சுமணி, சந்திரகுமாரி சுவர்ணா, சந்திர மௌலி விருஞ்சிபுரம், சுப்ரமணியம் சுந்தர்ராஜன், கமலக்கண்ணன் ஜகபதி ஆகியோரது இனிய குரல் மனதை மயக்கியது. பாலாஜியின் மிருதங்கமும், பத்மா பார்த்தசாரதி, தீபா சுப்பிரமணியத்தின் வீணையும் பக்கவாத்தியமாக மிளிர்ந்தது.

இறுதியில் 'பல ஸ்ருதி' கீர்த்தனையோடு நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. லலிதா வெங்கட்ராமன் மாணவர்களுக்கு நன்றி ஆசி கூறி மலர்கள் வழங்கினார். நிகழ்ச்சி அமைப்பாளர்களும், பங்கேற்ற மாணவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

சுஜப்ரியா வேணுகோபால்,
ஃப்ரீமாண்ட், கலிபோர்னியா.

© TamilOnline.com