பாட்டும் பரதமும் இணையும் 'முத்ராஸ்'
ஜூன் 19, 2010 சனிக்கிழமை அன்று லாஸ்யா டான்ஸ் கம்பெனி 'முத்ராஸ்' (முத்திரைகள்) என்ற நிகழ்ச்சியை சான்ஹோஸே நகரில் (1705 S White Road) உள்ள Mt. Pleasant High School அரங்கில் நிகழ்த்த இருக்கிறது. கர்நாடக இசையின் சாரத்தை நடன அசைவுகள் மூலம் கண்களுக்கு விருந்தாகப் படைத்து ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது 'முத்ராஸ்'. இந்நிகழ்ச்சியில் நடன மணிகள் ஜனனி நாராயணன், ஸ்ரீவித்யா ஸ்ரீநிவாஸன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பரதநாட்டியக் கலைஞர் உபயோகிக்கும் கை பாவங்களை 'முத்ரா' எனும் சமஸ்கிருத வார்த்தை குறிப்பிடுகிறது. கர்நாடக சங்கீதத்தில் பிரபலமான கவிஞர்கள் தாம் எழுதி இசையமைத்த பாடல்களில் விசேஷமாகத் தமது 'முத்திரை'களைப் பதிப்பதுண்டு. உதாரணமாக, சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் இயற்றிய பாடல்களில் முறையே 'தியாகராஜா', 'குருகுஹ', 'சியாம கிருஷ்ண' என்ற முத்திரைகள் இடம் பெற்றுள்ளன. சங்கீதத் முத்திரைகளையும், நடன முத்திரைகளையும் இணைத்துச் செவிக்கும் கண்ணுக்கும் விருந்தாக வழங்குகிறது 'முத்ராஸ்'.

ஜனனி, பெங்களூருவின் பிரபலமான நாட்டியக் கலைஞர்களான 'கிரண்' தம்பதியரிடம் பரதநாட்டியம் பயின்று தற்போது திருமதி வித்யா சுப்ரமணியம் நடத்தி வரும் 'லாஸ்யா' குழுமத்தில் சீனியர் மாணவியாகப் பயிற்சியைத் தொடர்கிறார். 'நிருத்ய கல்யா' என்னும் அமைப்பின் மூலம் இந்திய கிராமிய நடனங்களையும் பயிற்றுவிக்கிறார். ஸ்ரீவித்யா இந்தியாவில் பல்வேறு ஆசிரியர்களிடம் பரதம் பயின்று, பின்னர் டெல்லியில் 'கலைக்கூடம்' நாட்டியப் பள்ளியை நடத்தி வரும் கலைஞர் கோமளா வரதன் அவர்களிடம் பயின்று அரங்கேறியவர். தற்சமயம் ஸ்ரீவித்யா 'லாஸ்யா'வில் சீனியர் மாணவியாகப் பயின்று வருகிறார்.

இந்த நடனக் கலைஞர்கள் இருவரும் இணைந்து வழங்கவிருக்கும் 'முத்ராஸ்' நிகழ்ச்சிக்குத் திருமதி ஆஷா ரமேஷின் இனிய குரலும், திருமதி சாந்தி நாராயணனின் வயலின் மற்றும் திரு நாராயணனின் மிருதங்கமும் ஒருங்கிணைந்து இசை வழங்கவிருக்கின்றன. விரிகுடாப்பகுதியில் பிரபலமான நாட்டியக் கலைஞரும், 'லாஸ்யா'வின் இயக்குநருமான திருமதி வித்யா சுப்ரமணியன் நட்டுவாங்கம் செய்வார்.

நுழைவுக் கட்டணம்: $10

விவரங்களுக்கு:
ஜனனி 408.774.1910
ஸ்ரீவித்யா 408.219.1299

மின்னஞ்சல்: mudrasdance@gmail.com

அருணா கிருஷ்ணன்,
சன்னிவேல்

© TamilOnline.com