மாறிய கூட்டணி!
தி.மு.க.வுடன் அணிசேர்ந்து வைகோ யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட தாகச் சென்ற இதழில் எழுதியிருந்தோம். அது முற்றுப்புள்ளியல்ல என்பது பின்னர் தான் தெரிந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்ப் போராட்டத் தோழமையான விடுதலைச் சிறுத்தை இயக்கம் தி.மு.க. கூட்டணியில் இணைவதாக இருந்தது. பா.ம.கவும் இதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது. ஆனால் தி.மு.க.வோ விடுதலை சிறுத்தைக் குத் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதுமட்டுமல்லாமல் பா.ம.க. தனக்கு ஒதுக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைக்கு இடம் ஒதுக்கீடு செய்வதில் ஆட்சேபம் இல்லை என்று தி.மு.க. தலைவர் கூறியதைச் சிறுத்தைத் தலைவர் திருமா வளவன் விரும்பவில்லை.

இந்நிலையில் ஏற்கெனவே அ.தி.மு.க.வில் இருந்து முறையாக அழைப்பு வந்தால் அவர்களுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை என்று கூறினார் திருமாவளவன். விடுதலை சிறுத்தைக்கு 9 தொகுதிகளை ஒதுக்கித் தன்னோடு இணைத்துக்கொண்டது அ.தி.மு.க. வின் அரசியல் சாதுர்யம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இது பா.ம.க. வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவைத்தலைவர் காளிமுத்து பத்திரிகை களின் வாயிலாக ம.தி.மு.க.வைக் கூட்டணிக்கு அழைத்தது தி.மு.க. வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கருணாநிதி தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு 22 இடங்களுக்கு மேல் ஒதுக்கீடு செய்யமுடியாது என்று திட்ட வட்டமாக அறிவித்ததையடுத்து, வைகோ எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் ஜெயலலிதாவைப் போயஸ் தோட்டத்தில் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து ம.தி.மு.கவுக்கு 35 தொகுதிகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதை "இயல்பான கூட்டணி" என்று வர்ணித்தார் வைகோ.

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க.வின் 19-வது மாநில மாநாட்டில் வைகோவின் உருவப் படத்தை தி.மு.க தொண்டர்கள் எரித்துத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

வைகோவின் பிரிவு தி.மு.க. அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்காது என்று கருணாநிதி கருத்துத் தெரிவித்தாலும் மெகா கூட்டணி பலத்தை அ.தி.மு.க. பலவீனப் படுத்தியுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com