நேஹா குமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஏப்ரல் 3, 2010 அன்று லாஸ்யா டான்ஸ் கம்பெனி மாணவி நேஹா குமாரின் நாட்டிய அரங்கேற்றம், ஸாரடோகா மெக்ஃபீ அரங்கத்தில் நடந்தது. 'கஜவதனா' என்ற கணபதி துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. புஷ்பாஞ்சலி, சொக்கநாதர் கவுத்துவத்தில் திரிபுரம் எரித்தது, பிட்டுக்கு மண் சுமந்தது யாவும் சிறப்பாக அபிநயிக்கப்பட்டது. தொடர்ந்த 'சங்கர ஸ்ரீகிரி' என்னும் ஸ்வாதித் திருநாளின் கிருதிக்கு சிவ தாண்டவத்தை நேஹா அபிநயித்தவிதம் சிறப்பு. திருவீழிமிழலை கல்யாண சுந்தரம் பிள்ளையின் காம்போதி ராக வர்ணத்துக்கு தாளக் கட்டோடு ஆடியவிதம் நேர்த்தி. குறிப்பாக, தோழியிடம் நாதனை அழைத்து வா எனக் கெஞ்சியது, கல்லும் கனிந்து உருகாதா என மாமயில் மால்மருகன் மகிமையை படம் பிடித்துக் கட்டியது யாவும் அருமை. வர்ணத்தில் குரு வித்யா சுப்ரமண்யம் அளித்த பயிற்சியும் மாணவியின் உழைப்பும் பளிச்சிட்டன.

அடுத்து 'தெருவில் வாரானோ' என்னும் முத்துத்தாண்டவர் ஜாவளிக்கு, கொஞ்சல், கெஞ்சல், மோகம் என்று பல்வேறு பாவங்களைக் காட்டியது மனதைக் கவர்ந்தது. தொடர்ந்து 'நின்யாகோ' என்னும் புரந்தரதாசர் பாடலில் கஜேந்திரன் ஆதிமூலமே என முறையிடுவதும், நாராயணன் விண்ணில் தோன்றி அபயம் தருவதையும், பிரஹலாதனைக் காப்பாற்ற விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததையும் நடனத்தில் விவரித்த விதம் சிறப்பு. 'டுமக சலத ராமசந்திர' என்னும் துளசிதாசர் பஜனில் கௌசல்யா தன் குழந்தை ராமனுடன் விளையாடியதை அன்னைக்குரிய வாத்சல்யத்துடன் நேஹா விவரித்த விதம் சிறப்பு. இறுதியாக இடம்பெற்ற லால்குடி ஜயராமன் தில்லானாவிற்கு முகபாவம், துரிதகதி யாவற்றிலும் கவனம் செலுத்தி, துடிப்புடன் துள்ளி ஆடியது அருமை. அதிலும் முருகனை, "காத்தருள்வாய்" என்று வேண்டி நிறுத்திய விதம் நேர்த்தி.

ஆஷா ரமேஷின் வாய்ப்பாட்டும், சாந்தி, நாராயணன் தம்பதியினரின் பக்கவாத்தியமும் நிகழ்ச்சிக்கு பெரும்பலமாக அமைந்தன.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com