தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் வழங்கிய இசை நிகழ்ச்சி
ஏப்ரல் 10, 2010 அன்று தென் கலிபோர்னியா தமிழ் மன்றம் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி 'இளையராகம்' குழுவினரின் 'சங்கீத மேகம்' இன்னிசை நிகழ்ச்சியை லேக்வுட் நகரின் ஹூவர் மிடில் ஸ்கூல் அரங்கத்தில் நடத்தியது. திரு. அருள் குமார் வரவேற்புரை வழங்க, 'சங்கீத மேகம்' பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது.

'ரோஜாப்பூ ஆடி வந்தது' என்று கூவிய குயில்கள் ஸ்மிருதி, ராதிகா, பானு மற்றும் ஜனனி; 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடிய வெங்கடேஷ்; 'ராஜ ராஜ சோழன்' பாடிய செந்தில்; 'இளைய நிலா'வில் நனைத்த ரங்கராஜன்; 'என்னம்மா கண்ணு' போட்டிக்கு வந்த கோபால்; 'ஆசை நூறு வகை' ரஜினியை மேடைக்கு அழைத்து வந்த ஆனந்த் என்று அனைவருமே மிகச் சிறப்பாக இளையராஜாவின் பாடல்களைப் பாடி அசத்தினர்.

கீ போர்ட் வாசித்த வித்யா ஷங்கர், அஷ்வின் மற்றும் ஸ்ரீநாத், கிடார் வாசித்த ஈஸ்வர், கௌஷி, அஷோக் மற்றும் ரங்கராஜன், தபலா மிருதங்கத்தில் உதவி செய்த நாதன், காங்காவில் குரு, டிரம்ஸ் வழங்கிய பத்து மற்றும் சரவணன், பாட்ஸ் வாசித்த நாதன், குரு மற்றும் ரங்கராஜன், கப்பாஸில் கிரி என்று பல இசைக்கருவி விற்பன்னர்களும் சேர்ந்து மிளிர்ந்தனர். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாலாஜி எல்லோராலும் பாராட்டப் பெற்றார். இளையராகத்தின் சார்பாக அனிதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துத் தர நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சி 'உதவும் கரங்கள்' தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அனு ஸ்ரீராம்,
இர்வைன், கலிஃபோர்னியா

© TamilOnline.com