வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழா
ஏப்ரல் 17, 2010 அன்று மேரிலாந்து மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங் நகரில் வாஷிங்டன் தமிழ் சங்கம் சித்திரைத் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடியது. சிறப்பு விருந்தினராகத் திரு.செந்தில் ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டார்.

வர்ஜீனியா தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். சிவா நவரத்தினம் வரவேற்புரை வழங்கினார். மூன்று வயதில் இருந்து பதின்மத்தைத் தொடும் வயது வரையிலான இளந்தளிர்கள், ஒருவர் பின் ஒருவராய்த் திருக்குறள் ஒப்பிக்க மேடையேறினர். கிளமெண்ட் ஆரோக்கியசாமி அவர்கள் ஒருங்கிணைப்பில் சிறுவர்களுக்கான இசைப் போட்டி சிறப்பாக அமைந்தது. அதிலே ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களுடைய பாடல் ஒன்றைப் பாடிய சிறுமியும், கருவியிசை தந்த சிறுமியும் மனதைக் கொள்ளை கொண்டார்கள்.

பிறகு வாஷிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. பாலகன் ஆறுமுகசாமி சங்கத்தின் சாதனைகளைக் குறித்துப் பேசினார். அடுத்ததாக, இந்தியத் தூதரக அதிகாரி திரு. வி.எஸ்.செந்தில் (இ.ஆ.ப.) சிறப்புரை ஆற்றினார். இந்தியாவின் மகத்தான வளர்ச்சி, தமிழ் மற்றும் தமிழர்களின் சிறப்பு ஆகியவற்றைக் விளக்கிப் பேசி அமர்ந்ததும் கரவொலி அடங்கச் சிறிது நேரம் பிடித்தது. தொடர்ந்து, கார்கில் போரில் பங்கேற்ற கர்னல் இரவி அவர்கள் பேசுகையில் சித்திரை விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

வலைப்பதிவர் பழமைபேசி. சித்திரைத் திருவிழாவின் மூலத்தை அறியும் நோக்கில் சிலப்பதிகாரத்தைக் கற்க முற்பட்டதையும், அதில் எவ்வாறு சமத்துவத்தோடு சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட்டது என்பதையும் விளக்கிப் பேசினார். பின்னர் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் எனும் தலைப்பில் செயலாளர் திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள் விரிவாகப் பேசினார். அடுத்துப் பேசிய தென்றல் முல்லை இதழின் ஆசிரியர் திரு. கோபிநாத் பேசினார்.

நாட்டுப்புறப் பாடலுக்கான நடனத்தை ஜானத்தன், பிரின்ஸ் மற்றும் ஜெய்சன் ஆகிய பதின்மவயதினர் அரங்கேற்றினார்கள். ஈழத்துக் கவிஞர் சேரனின் பாடலான 'பூமியின் அழகே பரிதியின் சுடரே' என்னும் பாடலுக்கு நேர்த்தியாக ஆடிப பரவசத்தில் ஆழ்த்தினர் அபிநயா நடனப்பள்ளி மாணவியர். மாணவியரில் ஒருவரான மாதவி சங்கர் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்க, நடன ஆசிரியர் திருமதி. ரேவதி குமார் நடன மேலாண்மையில் மேலும் சில பாடல்களுக்கு நடனம் இடம்பெற்றது.

இலக்கியச் சுவை கூட்ட மேடையில் தோன்றினார் முனைவர் இர.பிரபாகரன். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்னும் புறநானூற்றுப் பாடலுக்கு நயம்படப் பொருள் விரித்து அவர் பேச, அதற்கு இசையமைத்துப் பாடினர் திருமதி. லதா கண்ணன் மற்றும் திரு. அய்யப்பன்.

'தனித்தமிழில் பேச முடியுமா?' என்னும் நிகழ்ச்சியை நடத்தினார் கவிச்சோலை ஜான் பெனடிக்ட். நடுவர்களாக முனைவர் சரவணபவன், திரு. வேலுச்சாமி, திரு. பழமைபேசி ஆகியோர் செயலாற்ற, திருமதி. புஷ்பராணி, மருத்துவர் ஜெயகோபால், திரு. ஜோகன், திரு. சுந்தர் குப்புசாமி, திருமதி. உமாதேவி ஆகியோர் போட்டியில் பங்கேற்றனர். அனைவருமே ஆங்கிலச் சொல் இடம் பெறாமல் பேசி அரங்கத்தினரை வியப்பில் ஆழ்த்தினர். திரு. சுந்தர் குப்புசாமி முதலிடம் வென்றார்.

'திரைப்படப் பாடல்களால் தமிழ் வளர்ச்சி அடைகிறதா? வீழ்ச்சி அடைகிறதா?' எனும் தலைப்பிலான பட்டிமண்டபம் திரு. பிரபாகரன் முருகையா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திரு.செயபாண்டியன் நன்றி நவில விழா இனிது நிறைவெய்தியது.

பழமைபேசி,
வடகரோலினா.

© TamilOnline.com