நீயா, நானா?
ஏப்ரல் 18, 2010 அன்று மெர்சி விஹார் குழுவினர் வழங்கிய 'நீயா, நீனா?' நிகழ்ச்சி லாஸ் ஆல்டோஸ் பகுதியிலுள்ள ஃபுட்ஹில் கல்லூரியிலும், ஏப்ரல் 24 அன்று லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஜெயின் சென்டர் கலையரங்கிலும் நடந்தேறியது.

இதில் விஜய் டி.வி. புகழ் கோபிநாத் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, "குழந்தைகள் வளர்ப்பதற்குச் சிறந்தது அமெரிக்க சமுதாயமா? இந்திய சமுதாயமா?" என்ற தலைப்பில் நீயா, நானா என்ற விவாதத்தை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சி 'மெர்சி விஹார்' அமைப்புக்கு நிதி திரட்டும் முகமாக நடத்தப்பட்டது. மெர்சி விஹார் அமைப்பு இந்தியாவிலுள்ள மூளை வளர்ச்சி குன்றிய, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனமாக 2005ம் ஆண்டில் ரமேஷ் வீமராஜ், சாந்தி ரமேஷ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியை ராகவேந்திர ஹனுமந்த ராவ் தொகுத்து வழங்க, சாந்தி ரமேஷ் திருவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். குழந்தைகள் சுபாஷ்-ஸ்ரீசாரதா தங்கள் மழலைத் தமிழில் கடவுள் வாழ்த்துப் பாடினர். தொடர்ந்து திருமதி இந்திரா சீனிவாசன் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்த கீதா சேஷாத்ரியின் 'குறை ஒன்றும் இல்லை' வயலின் இசை வெகு சிறப்பு. 'கலியுகத்தில் தமிழையும், தமிழனையும் பற்றி நாரதர்' என்ற தலைப்பில் அரங்கேறிய நாடகம் அனைவரையும் சிரிக்க, சிந்திக்க வைத்தது.

மாஸ்டர் சுபாஷ் ரமேஷின் டிரம்ஸ் இசை அனைவரையும் தாளம் போட வைத்தது. அருண் விஸ்வநாதனின் பலகுரல் இசைக்கு சபையில் பலத்த வரவேற்பு. தொடர்ந்து மெர்சி விஹார் அமைப்பின் தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான ரமேஷ் வீமராஜ் அவர்கள் மெர்சி விஹார் அமைப்பைப் பற்றி விளக்கி, கோபிநாத் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

நீயா, நானா விவாதத்தில் இரண்டு அணியினருமே தமது வாதத் திறமையைக் காட்டினர். கோபிநாத் வழக்கம் போல சிறப்பாக வழிநடத்தி, எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்ப்பை அளித்து விவாதத்தை முடித்து வைத்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக கோபிநாத் அவர்களுக்கு "கருத்து ஆய்வு வேந்தன்" என்ற விருதினை ரமேஷ்-சாந்தி ரமேஷ் வழங்கினர்.

மெர்சி விஹாரின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவும், உதவித் தொகை வழங்கவும் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள:
இணையதளம் - www.mercyvihar.org
மின்னஞ்சல் - info@mercyvihar.org

செய்தி அறிக்கையிலிருந்து

© TamilOnline.com