உட்கார்ந்து சாப்பிட உக்காரை வகைகள்
இது திருநெல்வேலி மாவட்ட ஸ்பெஷல். தீபாவளிக்குக் கண்டிப்பாகச் செய்வார்கள். உக்காரை பொன்னிறத்தில் உதிராக வரவேண்டும். களியாகவோ கூழாகவோ ஆகிவிட்டால் செய்தவரே சாப்பிட்டுத் தீர்க்க வேண்டியதாகவிடலாம்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



கடலைப்பருப்பு உக்காரை

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
வெல்லம் - 1 1/2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
நெய் - 2 கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை
கடலைப்பருப்பை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து ஊறப்போடவும். இரண்டு மணிநேரமாவது ஊறியபின், நீரை வடித்து மிக்சியில் நைசாக அரைத்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். பிறகு எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்.

வெல்லத்தை ஒரு வாணலியில் தேங்காய்த் துருவலுடன் சிறிது நீர் விட்டுப் பாகு எடுத்து (மண் இருந்தால் வடிகட்டி) உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். உப்புமா போல் உதிராக வரும்வரை நெய் இடையிடையே விட்டுக் கிளறி எடுத்து ஏலக்காய், முந்திரி, பச்சைக் கற்பூரம் போட்டு எடுத்துச் சாப்பிடலாம். நெய் தேவையானால் மேலும் சிறிது காயவிட்டு ஊற்றிக் கொள்ளலாம். மைக்ரோவேவ் அவனில் வைத்து, அடிக்கடிக் கிளறி விட்டும் இதைச் செய்யலாம்.

தங்கம் ராமசாமி,
நியூஜெர்ஸி

© TamilOnline.com