பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் 6வது தமிழ் மாநாடு
பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் ஆறாவது தமிழ் மாநாடு ஏப்ரல் 24-25 தேதிகளில் 'காலம்' என்ற பொதுத்தலைப்பில் நடக்க உள்ளது. நிகழ்ச்சி விவரம் பின்வருமாறு:

பேரா. செல்வா கனகநாயகம் (டொராண்டோ பல்கலைக்கழகம்) பல்லவ மன்னர் கால இலக்கியம் அக்காலப் பண்பாட்டையும் சமூகத்தையும் எவ்வாறு விளக்குகின்றது என்பது பற்றிச் சொற்பொழிவாற்றுகிறார். இக்கால பக்தி இலக்கியங்கள், பல்லவர் அரசியல் பற்றி என்ன கூறுகின்றன என்பது இவர் ஆய்வின் முக்கியக் கருத்து.

பேராசிரியர் விட்னி காக்ஸ் (லண்டன் பல்கலை) வழங்கும் கட்டுரை குலோத்துங்கச் சோழனைப் பற்றிப் பேசுகிறது. இவன் சோழ வம்சத்தைச் சேர்ந்தவனல்ல என்றாலும், திருமணத்தால் சோழநாட்டு இளவரசனாகி, பெரும் வேந்தன் ஆகிறான். இவனது கல்வெட்டுக்களிலிருந்து கிடைக்கும் செய்திகள், வேங்கி நாட்டில் அவனுடைய இளமை வாழ்க்கை, சோழ நாட்டின் மன்னனாக எவ்வாறு ஆனான் என்பவற்றைக் கட்டுரையில் ஆராய்கிறார்.

##Caption##பேரா. இந்திரா பீட்டர்சன், தஞ்சாவூரில் கிடைத்துள்ள நூல்களில் உள்ள மருத்துவக் கருத்துக்களுக்கும், சித்தர் நூல்களில் உள்ள மருத்துவக் கருத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமைகளைத் தனது கட்டுரையில் ஆய்கிறார். சரபோஜி மன்னர் கால மருத்துவ நூல்கள் பற்றியும் இவரது கட்டுரை ஆய்கிறது.

பேரா. பத்மா கைமல் (கோல்கேட் பல்கலை) காஞ்சி கைலாசநாதர் கோவிலில் உள்ள அம்மன் சிலைகள் பற்றி ஆய்கிறார். ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவி மகாத்மியத்தில் எவ்வாறு தேவியை ஆசிரியர் வருணிக்கிறாரோ, அதேபோல் காஞ்சி தேவி உள்ளாள் என்பது போன்ற கருத்துக்களை இவரது கட்டுரை பேசுகிறது.

ரீஷா லீலா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. மாணவி. மன்னர் கண்டராதித்தரின் மனைவி செம்பியன் மாதேவி கோவிலுக்கு ஆற்றியுள்ள பணிகளைப் பற்றிப் பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கங்கைகொண்ட சோழபுரத்திலும் தஞ்சை மாநகரிலும் உள்ள சிலைகள், கோபுரங்கள் இவற்றின் ஒற்றுமையை இவரது கட்டுரை ஆராய்கிறது.

எலிசபெத் சேகரன் பெர்க்கலி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. செய்கிறார். இவர் சங்க காலத் தலைவனை, கவிஞர்கள் ஒரு மன்னனாகவே படைத்துள்ளார்கள் என்று தனது கட்டுரையில் கூறுகிறார்.

பிளேக் வெண்ட்வொர்த் (யேல் பல்கலை) அவர்களின் கட்டுரை பிற்காலக் கவிஞர்களாகிய இரட்டையர்கள், சேரைக் கவிராஜப் பிள்ளை, அந்தகக் கவி வீரராகவ முதலியார் போன்ற கவிஞர்களின் பாடல்களைப் பற்றி ஆய்வு செய்கிறது. தமிழ் இலக்கியம், கம்பன் காலத்தில் மட்டுமல்ல, தொடர்ந்தும் வளமுடன் வாழ்ந்து வருகிறது என்கிறார் இவர்.

பேரா. ஷாஷா எபிலிங் (சிகாகோ பல்கலை) கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கையில் நடந்து வரும் உள்நாட்டுப் போர்களைக் குறித்து தமிழ்க் கவிஞர்கள் எழுதியுள்ள பாடல்கள், கட்டுரைகள், நாடகங்கள் பற்றித் தனது கட்டுரையில் ஆராய்கிறார். சங்கீதம், திரைப்படங்கள் பற்றியும் இவர் கட்டுரை பேசுகிறது.

பேரா. வசுதா நாராயணன் கொலுப் பண்டிகை பற்றி ஆராய்கிறார். கொலு ஆந்திர நாட்டிலிருந்தும், கருநாடக நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்று இவர் கூறுகிறார். இப்பண்டிகை சென்னை, அமெரிக்கா மற்றும் பல நகரங்களில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை இவரது கட்டுரை விளக்குகிறது.

பேரா. இசபெல் கிளார்க் (பிரின்ஸ்டன் பல்கலை) தனது கட்டுரையில் தமிழர் உறவுகள், திருமண உறவுகள் பற்றி ஆராய்கிறார்.

பேரா. கேத்தரின் யங் (மிகேல் பல்கலை, கனடா) பிராமணர் அல்லாத வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை, மத நம்பிக்கை, அரசியல் விருப்பம், ஜாதிப் பிரச்சனைகள், மதமாற்றம் எனப் பல விஷயங்கள் பற்றி இவருடைய கட்டுரை ஆராய்கிறது.

கீரன் கேசவமூர்த்தி பெர்க்கலியின் பிஎச்.டி மாணவர். தமிழ்நாட்டில் திருமண உறவுகள் பற்றி ஜெயகாந்தன் நாவல்கள் என்ன சொல்கின்றன என்பது குறித்து இவர் சொற்பொழிவாற்றுகிறார்.

© TamilOnline.com