அந்தத் தமிழ் இளைஞன்!
அந்த வயதான தம்பதியர் இதற்கு முன் வெளிநாடு சென்றதில்லை. இதுவே அவர்களது முதல் பயணம்.

பெண்ணையும், மகனையும் நன்கு படிக்க வைத்து திருமணம் முடித்தனர். அவர்கள் இருவரும் தத்தம் துணைவர்களோடு அமெரிக்காவில் இருக்கின்றனர்.

இதில் மகள் வயிற்றுப் பேரனை மட்டும் இத்தம்பதியர் வளர்த்தனர். மகள், மருமகன் கிளம்பும் போது பேரன் மூன்று மாதக் குழந்தை. தடுப்புஊசி போன்றவற்றை முடித்துவிட்டு மகளிடம் குழந்தையை ஒப்படைக்கக் கிளம்பினர் அத்தம்பதியர்.

சென்னையிலே விமான நிலையத்தில் ஓர் இளைஞன் மட்டும் அவர்களோடு வருவதை பார்த்தார்கள். ஊரறியாச் சீமையில் அதுவும் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் தங்களோடு வருவதைப் பார்த்ததும் அவர்களுக்கு தைரியத்துடன் ஒரு துணையும் கிடைத்துவிட்டது போல் மகிழ்ந்தனர்.

அவர்களோடு அவர்கள் பெட்டி முதலாக இருந்தது போதாதது போல் பேரனையும் சுமந்து கொண்டு ஒவ்வொர் இடத்திலும் துன்பப்பட்டு வருந்தினர். இந்தத் தள்ளாத வயதில் ஏண்டா, அமெரிக்காவுக்கு கிளம்பி வந்தோம் என்று கவலைப்பட்டனர். ஆனால் ஒரு தடவை கூட அந்த இளைஞன் அவர்களுக்கு உதவவில்லை. எப்போது பார்த்தாலும் கண்களை மூடியே உட்கார்ந்திருப்பான்.

அந்த வயதான அம்மாள் அவள் அருகே சென்று, ''ஏந் தம்பி! நீங்கள் எந்த ஊர் போறீங்க? நாங்க தேவதை ஊருக்கு போகிறோம்'' என்றார்.

##Caption## அந்த இளைஞனோ கடைசிவரை கண்ணைத் திறந்து பார்க்கவில்லை. மாறாக அந்த அம்மாளின் பேச்சைக் கேட்டு மெதுவாக முறுவலித்துக் கொண்டான். ஆங்கில உச்சரிப்பு வராத அம்மாள் என்று நினைத்துக் கொண்டானோ.

அந்த தம்பதியர் விமான நிலையத்திலிருந்து தன் பேரக் குழந்தையோடு இறங்கினர் மிகுந்த ஆவலுடன். அப்போது அந்த பாட்டி மனது கேட்காமல் அந்த இளைஞனைத் திரும்பிப் பார்த்தாள். பேசத்தான் மாட்டேன் என்கிறான். அட! கூட்டத்தோடு கூட்டமாய் நம்மோடு இறங்கலாமில்லையா? இது எதிலே சேர்த்தி என்று நினைத்தாள்.

உதவி செய்ய வேண்டுமே இவர்களுக்கு என்று எண்ணுகிறானா? இல்லை தேவையில்லாத கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமே என்று ஒதுங்குகிறானா?

எது எப்படியோ தன் மகள், மருமகனோடு விமான நிலையத்தில் காத்திருப்பாள் காரோடு என்று நினைத்து பூரிப்படைந்தது அந்தத் தாயுள்ளம்.

மறுநிமிஷம் குழந்தையை வாரியணைத்துக் கொண்டார்கள் மகள், மருமகன் இருவரும். குழந்தையை முத்தமாறி பொழிந்தார்கள். இருவர் கண்களிலும் நன்றிக் கண்ணீர். ஆனந்தக் கண்ணீர்.

அத்தம்பதியருக்கு ஆனந்தக் கண்ணீர். தன் மகள் பேண்ட், சூட்டிலும், மருமகன் அபாரமான உடையோடு வந்திருப்பதைக் கண்டு விம்மினர். கடவுளுக்கு நன்றியை மனதார செலுத்தினர்.

மூவரோடு காரில் உட்கார்ந்ததும் ஒரே சந்தோஷம் பிடிபடவில்லை அவர்களுக்கு. நாம் வளர்த்தது ஒருமாதிரி. இப்போதிருக்கும் மகளின் நிலை ஒரு மாதிரி. எல்லாம் படிப்புக் கொடுத்த உயர்வு, வசதி, வாழ்க்கை. அதுவும் நாகரீகமான அமெரிக்காவாச்சே என்று நினைத்துப் பெருமைப்பட்டனர். சுடுநீரில் குளித்து, உடை மாற்றி, உணவு உட்கொண்டே சகலவிஷயங்களையும் மாற்றி மாற்றிப் பேசித் தீர்த்தனர்.

இரண்டு, மூன்று நாட்கள் ஆகியிருக்கும். கீழே ஒரே சத்தம். என்னவென்று ஓடினாள் அவர்களது மகள்.

அங்கே ஒரு சிறுவன். மூன்று வயதிருக்கும். கிழே படி தடுக்கி விழுந்து, அதனால் மண்டையில் சிறு கீறலும், கால் முட்டிகளில் சிராய்ப்பும் ஏற்பட்டு அழுது கொண்டிருந்தான்.

உடனே எதிலிருக்கும் கட்டிடத்திற்கு சிறுவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். மகள் ஓடுவதைப் பார்த்த அந்த அம்மாளும் மகளுடன் ஓடினாள்.

அந்த கட்டிடத்தின் உள்ளேயிருந்து வந்த ஆளைப் பார்த்ததும் அப்படியே ஆச்சரியப்பட்டார்கள் அந்த அம்மாள். அவன் விமானத்தில் வந்தவனே. அந்த ஆள் அவசர, அவசரமாகத் தன் மகனைப் பார்த்துக் கொண்டே ‘ரொம்ப நன்றி' என்று சொல்கிற மாதிரி இரு கைகளையும் கூப்பினான். கேட்டுக் கொண்டிருந்த மனைவிக்கும் பதில் கூறாது மருத்துவரிடம் காட்டக் குழந்தையோடு ஓடினான் வெளியே.

நடந்ததை தன் கணவரிடம் கூறினாள் அந்த அம்மாள். அமெரிக்காவே ஒரு விந்தையான ஊர் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

சாந்தினி பரமேஸ்வரன்

© TamilOnline.com