மார்ச் 2010: வாசகர் கடிதம்
வட அமெரிக்காவில் தென்றலை உலாவரச் செய்து 10 ஆண்டுத் தமிழ்ச் சேவையைக் கடந்திருக்கிறீர்கள்! மகத்தான தங்கள் பணிக்கு அன்பான பாராட்டுக்கள். மதுரபாரதி, மதுசூதனன், அரவிந்த் சுவாமிநாதன், சிவகுமார் நடராஜன், சித்ரா வைத்தீஸ்வரன் உள்ளிட்ட தென்றல் வெளிவரப் பக்கபலமாய் இருக்கும் தங்கள் குழுமத்தின் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உயரிய அர்ப்பணிப்போடும், தரமான படைப்புகளை மட்டுமே தென்றலில் வெளியிட வேண்டும் என்ற மேன்மையான கொள்கையில் உறுதியாக இருக்கும் தங்கள் அனைவரின் பணி மேலும் சிறக்கப் பிரார்த்திக்கிறேன்.
சென்னிமலை சண்முகம்,
நியூயார்க்

*****


தென்றல் வாசகர்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள். பல்லாண்டு காலம் தென்றல் மணம் வீச இறைவனை வேண்டுகிறோம்.
மைதிலி பார்த்தசாரதி,
பாஸ்டன்

*****


பிப்ரவரி தென்றல் இதழ் நிஜமாகவே மணக்க மணக்கத் தான் இருக்கிறது. மிசோரம் மற்றும் சிவராத்திரி செய்திகள் மனதைக் கொள்ளை கொண்டு விட்டன. சிறப்புப் பார்வையின் பிற நிகழ்வுகளைக் குறித்து வரப்போகும் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எழுத்தாளர் பாமாவின் கதாநாயகி கன்னியம்மாவைப் போல் எத்தனை வாயில்லாப் பூச்சிகள் அவதிப்படுகிறார்களோ! நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.
கமலா சுந்தர்,
நியூஜெர்ஸி

*****


தென்றல் ஜனவரி 2010 இதழில் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி ஐயாவின் நேர்காணல் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். என் கல்லூரி காலத்தில் ஐயாவின் படைப்புகளில் "எண்ணங்கள்", "உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்" எல்லாம் தமிழ்ப்பாடத்தில் இருந்தன. அதை மிக சுவாரஸ்யமாக எடுத்துக் கூறுவார் எங்கள் தமிழ்ப் பேராசிரியை டாக்டர் பொன்மணி வைரமுத்து. அதையெல்லாம் நினைவூட்டியது அவரது நேர்காணல். அளித்த தென்றலுக்கு என் மனமார்ந்த நன்றி!
புவனா ஜெயகுமார்,
கலிஃபோர்னியா

© TamilOnline.com