'பல்லவிதா' வழங்கும் 'விவ்ருத்தி'
பல்லவிதா என்றால் இளந்தளிர். இளைய சமுதாயத்தினரிடம் கர்நாடக சங்கீதம் துளிர்த்துத் தழைக்க உறுதுணையாக இருப்பதைத் தனது நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பைத் திருமதி. லதா ஸ்ரீராம் நிறுவியுள்ளார். இதன் துவக்கவிழா 2010 ஏப்ரல் 9-10 தேதிகளில் 'விவ்ருத்தி' என்ற பெயரில் சான் ரமோனில் நடக்க இருக்கிறது. சங்கீதக் கலைஞர் ஸ்ரீ டி.எம்.கிருஷ்ணா இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன், கர்நாடக சங்கீதக் கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடலுக்கும் தலைமை தாங்க இருக்கிறார். பல்லவிதாவின் ஊன்றுகோலான 'பத்மபூஷண்' பி.எஸ்.நாராயணசாமி, 'சங்கீத ரத்னாகரா' குருவாயூர் துரை ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

திரு டி.எம்.கிருஷ்ணாவும், திருமதி பாம்பே ஜெயஸ்ரீயும் கர்நாடக இசை சம்பந்தமான 'ஸ்வானுபவம்' என்னும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் சென்னை கலாக்ஷேத்திராவில் நடத்தி வருகின்றனர். இசை குறித்த பயிற்சி, உரையாடல் மற்றும் பல்வேறு அம்சங்களையும் கொண்ட இந்நிகழ்ச்சியின் மறுபதிப்பே 'விவ்ருத்தி' ஆகும்.

டி.எம். கிருஷ்ணா ஒரு சங்கீத மாமேதை. அவரது திறமையை மெச்சி அவருக்கு சங்கீத வித்வான் விருது உட்படப் பல விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.நாராயணசாமி அவர்கள் செம்மங்குடி சீனுவாச ஐயரின் பிரதான சீடர். கர்நாடக சங்கீதத்தின் ஆசார்யார் என்று இசையார்வலர்களால் போற்றப்படுபவர். குருவாயூர் துரை மிருதங்க உலகின் ஜாம்பவான். இந்த மாமேதைகளின் உழைப்பும், திருமதி லதா ஸ்ரீராமின் தணியாத இசையார்வமுமே பல்லவிதா தோன்ற முக்கியக் காரணம்.

திருமதி லதா பாரம்பரிய சங்கீதப் பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தையார் ராஜகோபாலனிடமும், பி.எஸ். ராஜம் அவர்களிடமும் இசை பயின்றவர். தற்போது பி.எஸ். நாராயணசாமி அவர்களின் சிஷ்யையாக உள்ளார். பொழுதுபோக்காக இசை கற்பிக்க ஆரம்பித்து, கடந்த 20 வருடங்களாக ஒரு சங்கீதப் பள்ளியை நடத்தி வருகிறார். தந்தை ராஜகோபாலன் இவருக்குப் ப்லவிதங்களில் உதவிகரமாக இருந்து வருகிறார்.

திருமதி லதா வட அமெரிக்காவில் மட்டுமல்லாது இந்தியாவிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். 'விவ்ரித்தி' நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த 'பல்லவிதா' வளைகுடாப் பகுதியிலுள்ள முக்கியமான பாடகர்களையும், ஆசிரியர்களையும் இருகரம் நீட்டி வரவேற்கிறது.

மேலும் தகவலுக்குத் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரி: vivrti@rstech.net

சுஜாதா ஐயர்,
ஃப்ரீமாண்ட், கலிபோர்னியா

© TamilOnline.com