திருப்பாவைக்கு இந்தியில் விளக்கம்
தமிழ் திருப்பாவைக்கு ஹிந்தியில் விளக்க உரை சொல்கிறார், அதுவும் ஒரு குஜராத்திக்காரர். இது நடப்பது மும்பை, காட்கோபர் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பாலாஜி கோயிலில். இந்தக் கோயிலின் அர்ச்சகர்கள் குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

அந்த நாளில் பெரும்புதூர் மாமுனி ஸ்ரீ ராமானுஜர் அருளால் வடதேசத்தில் பலர் வைணவர் ஆனார்கள். குஜராத்திலும் நிறைய வைணவர்கள் உண்டு. இந்தக் கோவிலை அவர்கள் நிர்வகித்து வருகிறார்கள். இங்கு வருடா வருடம் மார்கழி மாதம் திருப்பாவை உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள கரோடியா நகர் பகுதியிலிருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் குஜராத் என்று பல்வேறு மொழி பேசுபவர்கள் இந்த உற்சவத்தில் கலந்து கொள்கிறார்கள். பெண்மணிகள் சிலர் சிற்றஞ்சிறு காலை வந்து ஸ்ரீ ஆண்டாள் படத்திற்கு தினமும் விதவிதமாக அலங்காரம் செய்கிறார்கள். முத்தங்கி அலங்காரமும் உண்டு.

சுப்ரபாதத்தைத் தொடர்ந்து திருப்பாவை சொல்வார்கள். இதனைத் தொடர்ந்து கோவிலிலே தங்கியிருக்கும் குஜராத் குருஜி அன்றைய தினத்தின் திருப்பாவைக்கு ஹிந்தியில் விளக்கம் சொல்வார். கேட்டு ஆனந்திப்பவர்கள் பலவித மொழிகள் பேசுபவர்கள். இந்திய தேசிய ஒருமைப்பாட்டை இங்கே காணலாம்.

அந்த நாளுக்குரிய திருப்பாவையை பாடகி ஒருவர் பாடுவார். எல்லோருக்கும் கல்கண்டு, பொங்கல், வெண் பொங்கல், தயிர்சாதம், சுண்டல் ப்ரசாதம் விநியோகிக்கப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமும் விமரிசையாக நடத்துகிறார்கள்.

ராதா ராமஸ்வாமி,
சன்னிவேல், கலி.

© TamilOnline.com