மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா

ஜனவரி 16, 2009 அன்று பொங்கல் திருநாள் மிசௌரி தமிழ்ச்சங்கத்தினரால் செயிண்ட் சார்லஸ் நகரிலுள்ள செயிண்ட் சார்லஸ் மேல்நிலைப்பள்ளி அரங்கில் கொண்டாடப்பட்டது. விழா மேடை பொங்கல் பானை, கரும்பு, வாழை மரங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சங்கச் செயற்குழுத் தலைவர் வீர பாண்டியன் சிறப்புரையாற்றினார். புவனாஸ்ரீ தொகுத்தளித்தார். முதல் நிகழ்ச்சியாகக் காவடி ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மேனா மினிக்கி நடனம், பொங்கல் கலக்கல், போகி நடனம், தமிழா தமிழா நாளை நம்நாடு அணிவகுப்பு நடனம் என அனைத்தும் சிறப்பாக இருந்தன. அடுத்து பெண்கள் 'முகுந்தா முகுந்தா...' பாடலுக்கு ராதை நடனம் ஆடி மகிழ்வித்தனர்.

பின்னர், தமிழ்ப் பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு, நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம், துரியோதன வதம், நவீன திருவிளையாடல் நாடகங்கள், கொன்றை வேந்தன், ரீ மிக்ஸ் நடனம் ஆகியவை நடைபெற்றன. ஆண்களின் ஒயிலாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் அரங்கத்தை அதிர வைத்தன.

தமிழ்த்தேனீ போட்டியில் வெற்றி பெற்ற மிசௌரி தமிழ்ப்பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளி முதல்வர் திரு மதியழகன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.

மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் இளைஞர் பிரிவான TSYVO (Tamil Sangam Youth Volunteer Organization) ஏழை மாணவர்கள் பள்ளிக்குச் செல்லத் தேவையான பொருட்கள் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஹைதி மக்களுக்காகவும் நிதி திரட்டினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் திரு வீர பாண்டியன் நன்றி தெரிவித்தார். மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான நாராயணசாமி கனிக்கண்ணன் (உப தலைவர்), திருமதி மஞ்சு ஸ்ரீஹரி (செயலாளர்), திருமதி சாருலதா சிங்காரவேலன் (இணைச்செயலாளர்), திரு பாபு சம்பத் (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்) திரு செந்தில் ராதாகிருஷ்ணன் (இணைய ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

© TamilOnline.com